ராஜ்யசபா இடைத்தேர்தல்
அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக இருந்த சி.வி. சண்முகம், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற அவர், தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால், காலியான ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆணையிட்டது. அதன்படி, வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தவெகவிற்கு வாய்ப்பு
கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் உள்ள தவெகவிற்கு 107 எம்எல்ஏக்கள் பலம் இருப்பதால், அவர்களால் ராஜ்யசபாவுக்கு ஒருவரை அனுப்ப முடியும்.
காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்த தவெக
ஒரு இடத்தை ஒதுக்குமாறு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கேட்டுக் கொண்டதால், அதை ஏற்று தவெக தலைவரும் முதல்வருமான விஜய், காங்கிரஸ் போட்டியிட விட்டுக் கொடுத்தார்.
பிரவீன் சக்ரவர்த்தி போட்டி
அதன்படி, விஜயின் நண்பரும், ராகுல் காந்தியின் வலதுகரமாக கருதப்படுபவருமான பிரவீன் சக்வரத்தியை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது.
அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சுயேச்சைகளாக 14 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
வேட்புமனுக்கள் பரிசீலனை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டன.
பிரவீன் சக்ரவர்த்தி மனு ஏற்பு
முதலில் பிரவீன் சக்ரவர்த்தியின் மனு சரிபார்க்கப்பட்டு, ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சுயேச்சைகளின் மனு நிராகரிப்பு
ராஜ்ய தேர்தலில் தமிழகத்தை பொருத்தவரை 34 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒருவர் போட்டியிட முடியும். சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் எம்எல்ஏக்களின் ஆதரவோடு போட்டியிடவில்லை என்பதால், 14 பேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
போட்டியின்றி தேர்வாகும் பிரவீன் சக்ரவர்த்தி
பிரவீன் சக்ரவர்த்தியின் மனு மட்டுமே ஏற்கப்பட்டு இருப்பதால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். வரும் 18ம் தேதி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். பின்னர் அவர் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்றுக் கொள்வார்.
=========================