தவெக ஆட்சியில் காங்கிரஸ்
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் ஆதரவாக இருந்தார்கள். அவர்களில் 2 பேருக்கு அமைச்சரவையில் இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. 59 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற இடத்தை நோக்கி காங்கிரஸ் நகர்ந்து இருக்கிறது.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் காரணமாக நான்கு எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியில் இருந்து விலகி, தவெகவில் இணைந்து இருக்கிறார்கள். அவர்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் குதிரைபேர அரசியல்
இது குதிரைபேர அரசியல் என்ற விமர்சனங்கள் பரவலாக எழுந்து வருகின்றன. ஆட்சிக்கு வந்த 2 வாரங்களில் நடைபெற்று இருக்கும் இந்த சம்பவங்கள், தமிழக அரசியல்ல புதிதாக பார்க்கப்படுது.
ஜோதிமணி எம்பி பதிவு
இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி எம்பி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். “காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணியில் இருக்கிறது. ஆட்சியில் பங்கெடுத்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியை தருவதற்கு நிச்சயம் ஒரு கூட்டணி கட்சியாக அவருக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.
தவெகவின் அனைத்து வழிகளையும் ஆதரிக்க மாட்டோம்
ஆனாலும் அதற்காக தவெக தேர்வு செய்யும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடியாது. அவர்கள் எடுக்கும் வழிமுரைகுள் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். மாறாக பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது.
தவறை காங்கிரஸ் தட்டிக் கேட்கும்
இந்த மாதிரியான சூழ்நிலையில் நமக்கு மாற்றுக் கருத்துகள் இருக்குமென்றால் அதனை தயங்காமல் வெளிப்படுத்துவது தான் தார்மீகம் மற்றும் அரசியல் ரீதியாக சரியானது. காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் குதிரை பேர அரசியலை நியாயப்படுத்தினாலும் அது தவறானது.
பாஜகவின் ஆயுதம் குதிரை பேரம்
இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம். பல்வேறு மாநிலங்களில் மக்கள் காங்கிரஸ் கட்சியை தேர்வு செய்திருந்தாலும், அதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க விடாமல் குதிரை பேரத்தை பயன்படுத்தி தடுத்து வருகிறது.
ஜனநாயக மரபை காப்போம்
தமிழ்நாட்டில் குதிரை பேரத்தை ஆதரித்தும், தமிழ்நாட்டிற்கு வெளியில் எதிர்த்தும் இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுக்க முடியாது. காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஒரு கட்சியாக செயல்படும் என்றால் அது காந்திக்கும், நேருவுக்கும், கொண்ட கொள்கைக்கும் செய்கின்ற வரலாற்று துரோகமாக மாறிவிடும்” என அந்தப் பதிவில் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
====================