தமிழகத்தில் SIR பணிகள்
SIR Form Fill Up Date Extension in Tamil Nadu : தமிழகம் உட்பட நாடு முழுவதும் 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision - SIR) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்கள்
இதற்காக, நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து வாக்கு மைய நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவங்களை விநியோகித்தனர். இந்தப் படிவங்களை நிரப்பித் திரும்ப ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4ஆம் தேதியுடன் முடிவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
கால அவகாசம் கோரிய தமிழகம்
இந்த நிலையில், குறுகிய கால அவகாசத்திற்குள் பணியை முடிப்பது சாத்தியமில்லை என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், மேற்கு வங்கத்தில் இந்தப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர்களில் சிலர், மன அழுத்தம் மற்றும் நெருக்கடி காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
எஸ்ஐஆர் நடைமுறைகள் நீட்டிப்பு
இந்தச் சூழலில், எஸ்.ஐ.ஆர். நடைமுறைகள் டிசம்பர் 4-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது இந்தக் கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை வாக்காளர்கள் டிசம்பர் 11 வரை திருப்பி ஒப்படைக்கலாம்.
டிச.16 வரைவு வாக்காளர் பட்டியல்
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குப் பிறகு, டிசம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
பிப். 14 இறுதி வேட்பாளர் பட்டியல்
இதையடுத்து, வாக்காளர் இறுதிப் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டால், தமிழகத்தில் எவ்வளவு போலி வாக்காளர்கள் நீக்கம் என்பது தெரிய வரும்.