நோயாளி பணிச்சுமை அதிகம்
Deputy Secretary of AIADMK Medical Team Ponnarasu : தமிழ்நாட்டில் மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம் , குழந்தைகள் நல மருத்துவம் , புற்றுநோய் உள்ளிட்ட பல கடுமையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவம் இன்று வேகமாக முன்னேறி வருகிறது. பல நோய்களை முன்கூட்டியே கண்டறியும் சோதனைகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பதால் சிகிச்சைக்காக பெருமளவில் திரண்டு வருகின்றனர். இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு பணிச்சுமை மிகுந்து காணப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ கல்வி இயக்குநரக சுற்றறிக்கையில் மூலம் சுமார் 400 ஜூனியர் ரெசிடென்ட் (JR) பணியிடங்களை நீக்க அல்லது மறுவினியோகம் (Redeployment) செய்யத் திட்டமிடப்பட்டிருப்பது மிகுந்த கவலைக்குரியது.
ஜூனியர் ரெசிடென்ட் இடங்களை மாற்றுவது நோயாளி சேவையை பாதிக்கும்
ஜூனியர் ரெசிடென்ட் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்கள் அவசர சிகிச்சை பிரிவு , பல்வேறு வார்டு கடமைகள், வெளிநோயாளர் பரிசோதனை (OPD), மற்றும் முக்கிய அறுவைச் சிகிச்சை நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர் . இப்பணியிடங்களை நீக்குவது அல்லது மாற்றுவது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளி சேவையை பாதித்து, பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
ஜூனியர் ரெசிடென்ட் இடங்களை நீக்கி உருவாக்கப்பட்டது
இதற்கு முன்பும் “புற்றுநோய் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்துதல்” என்ற பெயரில் இதேபோன்ற Redeployment நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 59 புதிய புற்றுநோய் நிபுணர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன என்றாலும், அவை பொது மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை துறைகளிலிருந்த ஜூனியர் ரெசிடென்ட் இடங்களை நீக்கி உருவாக்கப்பட்டன. இதுபோன்ற நடவடிக்கைகள் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, ஒரு துறையின் பணி இடங்களை மற்றொரு துறைக்கு மாற்றி அமைக்கும் வகையில் மட்டுமே அமைகின்றன.
அதேபோல், சமீபத்தில் திறக்கப்பட்ட 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படாமல், ஏற்கனவே பணிபுரியும் மருத்துவர்களை இடமாற்றம் செய்து அமர்த்தியிருப்பதும் சுகாதார சேவையின் நிலைத்தன்மையை பாதிக்கிறது என்று கூறியுள்ளார்.
இத்தகைய பதிலீடு இன்றி பணியிடங்களை மாற்றும் நடைமுறைகள் (Redeployment without replacement) சுகாதாரத் துறையின் அடித்தளத்தை பலவீனப்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. உண்மையான சுகாதார வளர்ச்சி என்பது ஏற்கனவே உள்ள பணியிடங்களைப் பகிர்ந்துகொள்வதன்மூலம் அல்ல; புதிய நிதி ஒதுக்கீடுகள், பணியாளர் விரிவாக்கம் மற்றும் மருத்துவ கட்டமைப்பு மேம்பாடு மூலமே சாத்தியம்.
அதிமுக மருத்துவ அணியின் கோரிக்கைகள்:
1. ஜூனியர் ரெசிடென்ட் பணியிடங்களை Redeployment செய்வதற்கான சமீபத்திய அரசாணையை (G.O.) அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
2. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு (PG) இடங்களுக்கு கூடுதல் புதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
3. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவ பணியிடங்களை குறைப்பதற்குப் பதிலாக, புதிய நிரந்தர பணியிடங்களை உருவாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சுகாதார சேவை வழங்க முடியும்
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியும்,சுகாதாரச் சேவையும் ஒன்றோடு ஒன்று இணைந்து வளர வேண்டுமெனில், ஏற்கனவே உள்ள வளங்களைத் தளர்த்துவது அல்ல, புதிய மனிதவளமும் நிதியும் சேர்த்துதான் அதனை வலுப்படுத்த முடியும். இதன் மூலம் தான் தரமான மருத்துவக் கல்வியும் மக்களுக்கு சமநிலை வாய்ந்த சுகாதாரச் சேவையும் வழங்கப்பட முடியும்.
மருத்துவ கல்லூரிகள் முன்பு போராட்டம்
ஜூனியர் ரெசிடென்ட் (JR) பணியிடங்களை ஒப்படைக்கும் முடிவிணை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அவ்வாறு செய்ய தவறினால் அரசு மருத்துவர்களின் உரிமைகளை ஆதரித்த அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் முன்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பொன்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.