Tamilisai Soundararajan Criticized DMDK DMK Alliance 2026 : திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து இருப்பதால், தமிழக அரசியலில் இன்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவே தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
திமுக பக்கம் தாவிய தேமுதிக
தற்போது திடீரென திமுக கூட்டணி பக்கம் தேமுதிக சாய்ந்து இருக்கிறது. ராஜய்சபா சீட் என்ற வாக்குறுதியே அந்தக் கட்சி இந்த முடிவினை எடுக்க காரணம் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் அதற்கு கிரீன் சிக்னல் கிடைக்காததால், பிரேமலதா விஜயகாந்த், இந்த முடிவினை எடுத்ததாக தெரிகிறது.
முதன்முறையாக திமுக கூட்டணியில்...
கட்சி தொடங்கி 2066 முதல் தேர்தலை சந்தித்து வரும் தேமுதிக முதன்முறையாக திமுகவுடன் கைகோர்த்து இருக்கிறது. 2016ம் ஆண்டே அமைந்து இருக்க வேண்டிய இந்தக் கூட்டணி 10 ஆண்டுகள் கழித்து தான் கனிந்து வந்திருக்கிறது.
தமிழிசை கருத்து
இந்தநிலையில், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது பற்றி தனது கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.
மூழ்கின்ற கப்பலில் தேமுதிக
மூழ்கின்ற கப்பலில் அவர்கள் சென்றிருக்கின்றனர் என்று தான் சொல்லவேண்டும். தேமுதிக கட்சி தற்போது மூழ்கின்ற கப்பலில் செல்கின்றனர். இது மன வேதனையை கொடுக்கின்றது. ஏனென்றால் மரியாதைக்குரிய மறைந்த கேப்டன் விஜயகாந்த், அரசியலில் நேர்மை கொண்டவராக இருந்தார்.
அரசியலில் நேர்மையாளர் விஜயகாந்த்
பெண்களின் பாதுகாப்பு, மக்கள் மற்றும் தன் ரசிகர்களின் பாதுகாப்பில் மிக கவனமாக இருந்தார். அப்படிப்பட்ட விஜயகாந்த் அவர்கள் துவங்கிய கட்சி இன்று இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது எனக்கு வேதனையை தருகின்றது.
தேமுதிக தொண்டர்கள் விருப்பமா...?
திமுகவுடன் தேமுதிக இணைந்தது அக்கட்சியின் தொண்டர்களின் விருப்பம் எனச் சொல்கின்றார்கள். அது எந்தளவிற்கு உண்மை என எனக்கு தெரியவில்லை.
கேப்டன் என தலைநிமிர்ந்து சொல்லக்கூடிய ஒருவரின் கட்சி தற்போது மூழ்கின்ற கப்பலில் ஏற்றி விட்டு இருக்கின்றனர். கேப்டனை தமிழக அரசியலில் மூழ்கின்ற கப்பலில் பயணம் செய்ய வைக்கின்றனர்.
என்டிஏ கூட்டணிக்கு இழப்பு இல்லை
இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலின், தேமுதிக திமுகவுடன் இணைந்தது, அமித் ஷா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய இழப்பு என சொல்கிறார். அதெல்லாம் ஒன்றுமே கிடையாது.
என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெறும்
தேசிய ஜனநாயக கூட்டணி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெரும். இந்த ஒரு முடிவை எடுத்ததற்கு பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு என் அனுதாபங்களை தான் சொல்ல வேண்டும்” என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
===============