அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தவெக
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், ஒரு பக்கம் கூட்டணி தலைவலி இருந்தாலும், திமுக மற்றும் அதிமுக கட்சிகளை, நடிகர் விஜயின் நகர்வுகள் கவலையில் ஆழ்த்தி வருகின்றன.
மக்களிடம் விஜயின் பிம்பம்
விஜய் மக்களிடையே உருவாக்கியுள்ள “காப்பாளர்” அல்லது “ரட்சகர்” என்ற பிம்பம். இது அரசியல் விமர்சனங்களுக்குள் அடங்காமல், பெரிய கட்சிகளுக்கு சவாலாக மாறி இருக்கிறது.
விஜயால் ஈர்க்கப்படும் மக்கள்
கூட்டங்களில் விஜய் பேசும் வார்த்தைகளில் அரசியல் குறைவு. ஆனால் மக்களிடம் நேரடியாக அணுகுவது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. விஜய் நம்மை போன்றவர் தான் என்ற பிம்பம், அவரை உச்சபட்ச தலைவராக அடையாளப்படுத்தி வருகிறது.
அரசியல் படுத்தப்படும் விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜயின் விஜயின் ரசிகர் கூட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட சமூகமாக மாறி ஆர்ப்பரிக்கிறது. திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள், அரசியல் வாழ்க்கையில் அவருக்கு வலுச் சேர்க்கிறது என்பது யாரும் மறுக்க முடியாது. க்கும் பலமாக உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இளைஞர்களை ஈர்க்கும் விஜய் இமேஜ்
விஜயின் இமேஜ், அரசியல் மீது நம்பிக்கை இழந்த இளம் தலைமுறையை வெகுவாக ஈர்த்து வருகிறது. திமுக, அதிமுக என்றால் 30 முதல் 40 வயதுக்கும் மேற்பட்டோர் மட்டுமே அரசியல் களத்தில் இருந்தனர். ஆனால் தமிழக வெற்றிக் கழகம், இளைஞர்களை தன்னெழுச்சி பெறச் செய்துள்ளது என்றால் அது மிகையாகாது.
கவலையில் திமுக, அதிமுக
இதன் காரணமாக ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் கவலை அடைகின்றன. கூட்டணி கட்சிகளின் வாக்குகளும் விஜய் பக்கம் சாயும் என்பதால், அவர்களும் பதறுகின்றனர்.
வலுவான கட்சி அமைப்பு, ஆட்சித் திறன், அரசியல் வரலாறு திராவிட கட்சிகளுக்கு இருந்தாலும், இளம் வாக்காளர்கள், நடுநிலை வாக்காளர்கள் தவெக பக்கம் சாய்ந்தால், நிலைமை தலைகீழாக மாறலாம்.
இளம் வாக்காளர்கள் கையில் முடிவு
விஜய் எந்த அரசியல் பொறுப்பையும் இதுவரை வகிக்கா விட்டாலும், மக்களின் மனதில் “மாற்று நம்பிக்கை” என்ற மந்திரச் சொல்லை விதைத்து வருகிறார். பாரம்பரிய அரசியல் கணக்குகளை குழப்பும் அவரின் வளர்ச்சி, உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
எதிர்ப்பாளர்களை ஈர்க்கும் விஜய்
விஜயின் பேச்சு சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, ஆதரவாளர்கள் மட்டுமல்ல, எதிர்ப்பாளர்களை கவனிக்கச் செய்கிறது. “அடுத்து விஜய் என்ன செய்யப் போகிறார்?” என்ற ஆர்வம், தமிழக அரசியலில் அவரை மையத்திற்கு கொண்டு வந்து இருக்கிறது.
திணறும் பாரம்பரிய கட்சிகள்
அரசியல் விமர்சனங்கள், விஜய்க்கு இலவச விளம்பரமாகிறது. தனிப்பட்ட தாக்குதல்களும் விஜய் முக்கியமானவர் என்ற பிம்பத்தை பொதுமக்களிடம் கட்டமைத்து வருகிறது. இந்த அரசியலை எதிர்கொள்ள முடியாமல் பாரம்பரிய கட்சிகள் தவித்து வருகின்றன.
நம்பிக்கை இழக்கும் கட்சிகள்
கொள்கை அரசியலைவிட, விஜயின் பிம்ப அரசியல் தமிழகத்தில் சக்தி வாய்ந்ததாக மாறியுள்ளது என்பதை மறுக்க முடியாது. தேர்தல் வாக்குறுதி, அரசியல் திட்டங்கள் விஜயை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
இதுவரை சிறுபான்மையினர், பெண்கள் வாக்குகளை நம்பி இருந்த திராவிட கட்சிகள், அந்த செல்வாக்கை இழந்து வருகின்றன.
தாறுமாறாக போகும் வெற்றிகள்
வீட்டுக்கு ஒரு வாக்கு என்ற தவெகவின் இலக்கு, 75 சதவீதம் பலித்தால் போதும், தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். தவெக ஆட்சி அமைக்கிறதோ இல்லையோ, திமுக, அதிமுக கூட்டணி வெற்றிகளை புரட்டி போடலாம்.
மக்களின் மனதில் விஜய் பிம்பம்
மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்பு, உணர்ச்சிகளைக் கொண்ட விஜய் உருவத்தை உடைப்பது கடினம். அண்ணாவின் மறைவுக்கு பிறகு, கருணாநிதியை ஆட்சி கட்டிலில் உட்கார வைத்த எம்ஜிஆர் எப்படியொரு ஒரு சக்தி வாய்ந்த தலைவரோ, விஜயும் அப்படி இருப்பாரா என்ற கேள்வியே, பிரதான கட்சிகளிடையே கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.
யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்
சட்டமன்ற தேர்தலை நோக்கி நகரும் தமிழக அரசியலில், விஜய் இந்த பிம்பத்தை வாக்குகளாக மாற்றுவாரா என்பதே, அவரது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் கேள்வியாக நிற்கிறது. இதற்கு கிடைக்க போகும் விடை, திமுக, அதிமுக கூட்டணியின் சேதாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்.
==============