இண்டியா கூட்டணி
பாஜகவுக்கு எதிராக இண்டியா கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்தது, திமுகவும், அதன் தலைவர் ஸ்டாலினும் தான். அவரது முயற்சிகளால், பல்வேறு மாநில கட்சிகள் கூட்டணிக்கு வந்தன.
மக்களவை தேர்தலை இண்டியா கூட்டணி ஒற்றுமையாக எதிர்கொண்டதால் தான், பாஜகவால் அறுதிப் பெரும்பான்மை பெற முடியவில்லை.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இடம்பெற்று 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தவெக ஆட்சி அமைக்க கைகொடுத்தது.
தவெக கூட்டணியில் காங்கிரஸ்
அதுமட்டுமல்லாமல், ஆட்சியிலும் பங்கேற்று 2 பேருக்கு அமைச்சர் பொறுப்பை வாங்கித் தந்துள்ளது. மேலும், தமிழகத்தில் இருந்து நடைபெறும் ராஜ்யசபா இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்த தவெக தலைவர் விஜய் ஆதரவ தெரிவித்து இருக்கிறார்.
காங்கிரஸ் மீது திமுக கடுங்கோபம்
காங்கிரசின் இந்த செயல்பாட்டை திமுக மிகப்பெரிய துரோகமாக பார்க்கிறது. இனி எந்தக் காலத்திலும் காங்கிரசோடு கூட்டணி கிடையாது என்ற முடிவை திமுக எடுத்து இருக்கிறது.
இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டம்
இந்தச்சூழலில் தான் 8ம் தேதி டெல்லியில் இண்டியா கூட்டணியில் ஆலோசனை கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் திமுக பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அதற்கு விளக்கம் அளித்து திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்க திமுகவுக்கு அழைப்பு
“டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் இண்டியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்துக்கு வருமாறு திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசை துணிவுடன் எதிர்த்தோம்
திமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட எஸ்ஐஆர், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு - ஒரே தேர்தல், வக்பு சட்டம், FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட - ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்திற்கும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாகத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றது.
மக்கள் மன்றங்களில் வாதாடினோம்
அதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்திலும், ஆட்சியில் இருந்த நேரத்தில் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், உரிய நேரத்தில் நீதிமன்றங்களிலும் எடுத்து வைத்து வாதாடியும், போராடியும் வந்திருக்கிறது.
இண்டியா கூட்டணி - திமுக மையம்
இண்டியா கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திமுக இயங்கியது. அதன் தலைவர் ஸ்டாலின்தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார். இதை இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், அக்கட்சிகளின் தலைவர்களும் நன்கு அறிவார்கள்.
காங்கிரஸ் கட்சி துரோகம்
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கட்சியினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் இண்டியா கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.
இண்டியா கூட்டணி பங்கேற்பில்லை
இந்தக் கூட்டத்தில் பங்கேற்காத அதேநேரத்தில், இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில்,திமுக என்றைக்கும் குரல் கொடுக்கும்” என அந்த அறிக்கையில் திமுக தெரிவித்துள்ளது.
=================