"DMK Are the Seniors" — Udhayanidhi Stalin Offers Advice to Chief Minister Vijay!|tamilnadu source: google
தமிழ்நாடு

தமிழக சட்டமன்றத்தில் சுவாரஸ்யம்: "திமுக தான் சீனியர்ஸ்" - முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

Kavitha prasanna

தமிழகத்தின் 17-வது சட்டமன்றப் பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை விறுவிறுப்புடன் தொடங்கியது.

இந்த அமர்வில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களிடையே நடந்த விவாதங்களும், பகிரப்பட்ட கருத்துகளும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

சபாநாயகர் தேர்வு

இன்றைய கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக, ஆயிரம்விளக்கு தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் சட்டமன்றப் பேரவைத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

சபாநாயகருக்கு உறுப்பினர்கள் வாழ்த்து

அவரை அவை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

உதயநிதி ஸ்டாலினின் சுவாரஸ்யப் பேச்சு

சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

முதல்வர் விஜய் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

"நானும் முதல்வர் விஜய் அவர்களும் ஒரே கல்லூரியில் (லயோலா கல்லூரி) படித்தவர்கள்" என்று குறிப்பிட்ட அவர், தொடர்ந்து ஒரு முக்கியமான கருத்தையும் முன்வைத்தார்.

திமுக-தான் சீனியர்

"கல்லூரி அளவில் நாங்கள் நண்பர்களாக இருக்கலாம், ஆனால் அரசாங்கத்தை நடத்துவதில் திமுக-தான் சீனியர். 1967-ஆம் ஆண்டிலேயே ஆட்சிக்கு வந்த பாரம்பரியம் எங்களது.

மாநில நலன் மட்டுமே நமக்கு முக்கியம்

எனவே, ஆட்சி நிர்வாகம் குறித்த எங்களது அறிவையும் அனுபவத்தையும் முதல்வருடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். அதனை ஏற்றுக்கொள்வதற்கு நீங்களும் (முதல்வர்) தயாராக இருக்க வேண்டும்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, தமிழ்நாட்டின் மாநில நலன் மட்டுமே நமக்கு முக்கியம்" என்று அவர் பேசினார்.

அரசியல் நாகரிகம்

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் தனது உரையைத் தொடங்குவதற்கு முன்பாகப் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஆளுங்கட்சித் தலைவர் இடையேயான இந்த ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றம், தமிழக அரசியலில் ஒரு புதிய நாகரிகத்தைப் பறைசாற்றுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

=====