DMK-Congress Alliance 2026 talks on seat sharing are still in a stalemate. The final decision lies with Stalin and Rahul google
தமிழ்நாடு

காங்கிரஸ் கேட்பது 36+2, திமுக ஆஃபர் 29+2 : பேச்சுவார்த்தை இழுபறி, செல்வப்பெருந்தகை மழுப்பல் பதில்

DMK Congress Alliance Seat Sharing Talks 2026 : தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இறுதி முடிவு ஸ்டாலின், ராகுல் கையில் உள்ளது.

Kannan

திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை

DMK Congress Alliance Seat Sharing Talks 2026 : சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்ய காங்கிரசுக்கு இன்றே கடைசி நாள் என திமுக கெடு விதித்தது. 39 தொகுதிகள் 2 ராஜ்யசபா சீட் காங்கிரஸ் எதிர்பார்ப்பு. ஆனால், இந்த அளவுக்கு தர திமுக தயாராக இல்லை, 29 சீட்கள் தான் என்பதில் கறார் காட்டுகிறது. ஆகவே இழுபறி நீடிக்கிறது.

திமுகவுக்கு நிர்பந்தம்

பெரிய கட்சியான காங்கிரசுடன் தொகுதி பங்கீட்டை முடித்து விட்டு, மற்ற கட்சிகளுடன், சுமூகமாக இடங்களை முடிக்க வேண்டிய நிர்பந்தம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. 16ம் தேதிக்குள் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயமும் திமுகவுக்கு உள்ளது.

ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு

இந்தநிலையில், 39 தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா சீட் என்ற அளவில் பேச்சுவார்த்தை நடத்துமாறு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்திற்கு ராகுல் காந்தி அறிவுறுத்தியாக கூறப்படுகிறது.

ராகுல் அறிவுறுத்தல்

அதன்படி, ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் , முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர். திமுக எம்பிக்களான கனிமோழி, டி.ஆர். பாலு அப்போது உடனிருந்தனர்.

தகவலை தெரிவித்த ப. சிதம்பரம்

சுமார் 1 மணி நேரம் இந்த ஆலோசனை நீடித்தது. காங்கிரசின் கோரிக்கையை ப. சிதம்பரம் முன்வைக்க, ஸ்டாலின், கேட்டுக் கொண்டனர். இறுதியாக காங்கிரசுக்கு 29 தொகுதிகள் 2 ராஜ்யசபா இடங்களை கொடுக்க திமுக முன்வந்ததாக தெரிகிறது.

சுமூகப் பேச்சு, தொடரும் இழுபறி

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த ப. சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டு புறப்பட்டுச் சென்றார். வழியில் காரை நிறுத்திய சிதம்பரம் செல்போனில் யாரிடமோ சற்று நேரம் பேசினார். திமுக தெரிவித்தவற்றை அவர் கட்சி தலைமையிடம் சொல்லி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஸ்டாலின் - ப. சிதம்பரம் சந்திப்பு சுமூக நடைபெற்றதாக கூறப்பட்டாலும், எத்தனை இடங்கள் என்பதை முடிவு செய்வதில், இழுபறி நீடிப்பது தெரிகிறது. திமுக கெடு விதித்த காலத்திற்குள் சுமூக முடிவு எட்டப்பட வாய்ப்பில்லை என்பது தான் தற்போதைய நிலை.

திமுக கறார், காங்கிரஸ் பிடிவாதம்

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் காங்கிரசுக்கு இதைவிடக் கூடுதல் இடங்களைத் தர முடியாது என்பதில் திமுக உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. திமுகவின் இந்த முடிவை காங்கிரஸ் ஏற்க மறுத்து பிடிவாதமாக நிற்பதே பிரச்னைக்கு காரணம்.

மார்ச் 5 - விடை கிடைக்குமா?

36 இடங்கள் கிடைக்கா விட்டால், கூட்டணியில் இருந்து வெளியேறவும் காங்கிரஸ் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. நாளை மறுநாள் (மார்ச் 5) ராஜய்சபா தேர்தலுக்கான மனு தாக்கல் நிறைவடைகிறது. அதற்குள் ஒரு முடிவு கிடைத்து விடும் என்று அறிவாலய வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

மரியாதை நிமித்தமான சந்திப்பு

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “இன்று நடந்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கூட்டணி உறுதியாக இருக்கிறது” .

பேச்சுவார்த்தை தொடரும்

தற்போதைக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை ஊடகங்களுக்கு தெரிவிப்போம், என்று செல்வப்பெருந்தகை மழுப்பலாக பதிலளித்தார்.

=================