தவெக விசில் சின்னம்
DMK Councilor Warns Sanitation Workers on TVK Whistle Symbol : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி, சென்னை பனையூரில் அலுவலகத்தை நிறுவி, வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
அரசியலில் விஜய் தீவிரம்
தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் கூட்டம், பொதுக்கூட்டம் என மக்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து, கட்சியை பலப்படுத்தி வருகிறார். இந்நிலையில், என்டிஏ கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணி என தமிழக அரசியல் நிலவரம் கடும் போட்டியில் இருக்கும்பொழுது. தவெக தலைவர் விஜயின் வருகையால், தேர்தல் களம் மேலும் சூடு கண்டுள்ளது.
விசில் சின்னம் விமர்சனம்
இந்த சூழலில், சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை அனைத்து கட்சிகளும் மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் தவெக கட்சிக்கு தேர்தல் சின்னத்தை அறிவித்துள்ளது.
இதில் கட்சியின் சார்பாக சமர்பிக்கப்பட்ட விசில், பேட் மற்றும் ஆட்டோ சின்னம் என 3 சின்னங்களை தவெக கட்சி சமர்பித்த நிலையில், தோ்தல் ஆணையம் அவர்களின் முன்னுரிமையான விசில் சின்னத்திற்கு ஒப்புதல் அளித்து வழங்கியுள்ளது.
பிரபலமாகும் விசில்
விசில் சின்னம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, தொடர்ந்து தவெக கட்சி நிர்வாகிகள் முதல், அவரது ரசிகர்கள் விசிலை கிடைக்கும் இடமெல்லாம் உபயோகப்பபடுத்தி வருகின்றனர்.
அதே சமயம், விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நாளில் இருந்து, மற்ற கட்சிகளில் இருந்தும் பல வித விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
விசில் ஊதக்கூடாது என்ற கவுன்சிலர்
சிவகங்கை நகராட்சி, 21வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் அயூப்கான். இவரது வார்டில் 18 தெருக்கள் உள்ளன. இங்கு நகராட்சி துாய்மை பணியாளர்கள் இருவர் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
வீடுகளில் குப்பை சேகரிக்கும் போது, இவர்கள் வந்துள்ளதை 'விசில்' ஊதி மக்களுக்கு தெரியப்படுத்துவர். நேற்று குப்பை சேகரிக்க வந்த துாய்மை பணியாளர்களிடம், அயூப்கான், 'இனிமேல் எங்கள் வார்டில் விசில் சத்தம் கேட்கக்கூடாது' என்றுகூறினார்.
குப்பையில் வீசப்பட்ட விசில்கள்
அவர்கள் பயன்படுத்திய விசிலை வாங்கி குப்பையில் போட்டுவிட்டு, ஸ்பீக்கருடன் கூடிய கை 'மைக்'கை வழங்கிவிட்டு, 'இனிமேல் விசில் ஊதக்கூடாது. மைக் பயன்படுத்தி தான் குப்பைகளை சேகரிக்க வேண்டும்' என, கண்டிப்புடன் கூறியுள்ளார்.
தவெக எதிர்ப்பு, கண்டனம்
இவரின் இந்த கண்டிப்புக்கு தவெக கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களிடம் இருந்து, பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது சிவகங்கை கவுன்சிலரின் இந்த சம்பவம் பெரும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.