151 மருத்துவ இடங்கள் - நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கு காலியாக உள்ள 151 மாநில ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
இதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கத்தை சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
151 மருத்துவ படிப்பு இடங்கள் பறிபோயின
இதனால் தமிழ்நாட்டின் 151 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் பறி போயுள்ளதாக பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
தவெக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி
இந்நிலையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின் , இவ்விவகாரம் தொடர்பாக தவெக அரசுக்கு சரமரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார்.
தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு மிகப்பெரிய அளவில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
அன்று 27% இடஒதுக்கீடு, இன்று தமிழகத்துக்கு இழப்பு
”ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக இதே நாளில் இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டை திமுக போராடி பெற்று தந்தது.
ஆனால் இன்று மருத்துவ படிப்பில் தமிழ்நாட்டுடைய இடங்களை இழக்கும் நிலை வந்துள்ளது.
தவெக அரசுக்கு சரமாரி கேள்வி
* இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகாதது ஏன்?
* முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தொடக்கம் முதலே அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமனம் செய்வதில் கூட தாமதம் ஏன்?
* நம்முடைய பக்கம் நியாயம் இருந்தும் எந்த விதமான வலுவான வாதங்களையும் நீதிமன்றத்தில் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதற்கான பின்னணி என்ன?
* அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்பாகவே, மாநில கலந்தாய்வினை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?
* அகில இந்தியத் தொகுப்புக்கு தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் மாற்றம் செய்யப்படுவதை எதிர்த்து கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும் அதனை செய்யாதது ஏன்?
* 29-05-2026 உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?
இப்படி பல கேள்விகளை பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள் என தன்னுடைய பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்
தமிழக மக்களுக்கு விளக்கம் தேவை
தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் தொண்டு செய்வதற்காக இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்துள்ளோம்.
லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களுடைய உயிர்ப்பிரச்சனை இது. இவ்விவகாரத்தில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும், மக்களுக்கும் தவெக அரசு அளித்தாக வேண்டும்.
இவ்வாறு தன்னுடைய பதிவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
===================