விலைவாசி அதிகரிப்பு
சென்னையில் பல்வேறு இடங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். ”திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த ஆட்சி தொடர வேண்டுமா?
‘யார் அந்த சார்?’ - கண்டுபிடிப்போம்
திமுக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ‘யார் அந்த சார்?’ என கண்டுபிடிக்கப்படும். திமுக ஆட்சியில் தரமான வடிகால் வசதி செய்யப்படவில்லை. அதனால்தான் சென்னை மக்கள் மழைக்காலங்களில் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
ஊழல் செய்வது தான் வேலை
ஊழல் செய்வதுதான் திமுகவின் முதன்மையான வேலையாக இருக்கிறது. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா? நான்கில் ஒரு பங்கு வாக்குறுதிதான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்விக் கடன் ரத்து செய்யப்படவில்லை. காஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படவில்லை. ரேசன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை அதிகமாக போடுவதாகச் சொன்னார்களே போட்டார்களே?
கஞ்சா புழக்கம் அதிகரிப்பு
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பவர்களுக்கு திமுக அரசே துணை நிற்கிறது. மொத்தத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
அதிமுகவில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக நிறுத்தி வைத்திருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 3 மாதங்களில் கஞ்சா ஒழிக்கப்படும். மின்கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி
வீட்டுவரி உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் குப்பைக்கும் வரிபோட்ட ஒரே ஆட்சி திமுக தான். கருணாநிதி குடும்பம் வளமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நடைபெறும் குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் இந்த நாட்டுக்கு தேவையா?.
வரவிருக்கும் தேர்தலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” இவ்வாறு பழனிசாமி பிரசாரம் செய்தார்.
வெற்றி வாய்ப்பு பிரகாசம்
அப்போது பேட்டியளித்த பழனிசாமி, இதுவரை 195 தொகுதிகளில் பிரசாரத்தை முடித்து இருப்பதாகவும், அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தார்.
20 நாட்கள் போராடி தான் திமுக கூட்டணி அமைத்ததாகவும், திமுக ஆட்சியில் நடைபெற்ற தவறுகள் குறித்து, அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
========