தமிழகத்தில் SIR பணிகள்
Tamil Nadu Draft Voters List 2025 Release Date : தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியில், கணக்கெடுப்பு பணி, கடந்த மாதம் தொடக்கம் முதல் நடைபெற்று வருகிறது.
6ம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்த இந்தப் பணிகள் வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. கணக்கீட்டு படிவங்களை பெற்று வரும் பொதுமக்கள், அவற்றை பூர்த்தி செய்து BLO-க்களிடம் சமர்பித்து வருகின்றனர்.
11ம் தேதி கடைசி நாள்
11ம் தேதி வரை படிவங்கள் பெறப்படும். திரும்ப பெறப்படாத கணக்கீட்டு படிவங்களின் பட்டியல், குறிப்பிட்ட முகவரியில் இல்லாத வாக்காளர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு செய்தவர்கள் போன்றவர்களை அடையாளம் காணும் வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்
இந்த பட்டியல், வரும் 11ம் தேதிக்கு பின்பு இறுதி செய்யப்படும். எனவே, வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்களை விரைவாக சமர்ப்பிக்க வேண்டும். 16ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம்.
தகுதியானவர்கள் விடுபட மாட்டார்கள்
எந்த ஒரு தகுதியான குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாத வகையிலும், எந்த ஒரு தகுதியற்றவரும் சேர்க்கப்படாத வகையிலும், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களும் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
====