ED approached Vijay govt seeking permission to continue investigation in money laundering case against Senthil Balaji google
தமிழ்நாடு

”கதவை தட்டும் அமலாக்கத்துறை” : பணமோசடி வழக்கு, விஜய் அரசுக்கு முதல் டெஸ்ட் : செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் தொடர் விசாரணைக்கு அனுமதி கோரி விஜய் அரசை அணுகி இருக்கிறது அமலாக்கத்துறை.

Kannan

முதல்வர் விஜய் அரசு

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று 10 நாட்கள் ஆகிறது. அதற்குள் முக்கியத்துவம் வாய்ந்த சட்டப் போராட்டங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

செந்தில் பாலாஜி வழக்கு

திமுகவின் மிக முக்கியத் தூணாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜிக்கு எதிரான 'வேலைக்கு லஞ்சம்' பெற்ற ஊழல் வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருக்கிறது.

குற்றப்பத்திரிகை தாக்கல்

2011-16 காலகட்டத்தில், போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்று, பணமோசடி செய்த வழக்கில் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

திமுக அரசு முடக்கம்

ஆனால், திமுக ஆட்சியில் செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்ததால், அவரை விசாரணை செய்ய வேண்டிய கட்டாய அனுமதியை அரசு வழங்கவில்லை.

களமிறங்கிய அமலாக்கத்துறை

தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தவெக அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அமலாக்கத்துறை தனது பணியை தொடங்கி இருக்கிறது.

தலைமைச் செயலாளருக்கு கடிதம்

கடந்த 15ம் தேதி தலைமைச் செயலாளர் எம். சாய்குமாருக்கு 3 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.

ஊழல் தொடர்பான அனைத்து ரகசிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய ஒரு ‘பென் டிரைவையும்’ (Pen Drive) இணைத்துக் கொடுத்துள்ளது.

தமிழக அரசுக்கு கோரிக்கை

"நீதிமன்ற விசாரணை உடனடியாகத் தொடங்க வேண்டும்; எனவே தமிழக அரசு இதற்கு உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்று அமலாக்கத்துறை கோரியுள்ளது. இந்த நடவடிக்கை, திமுக மற்றும் செந்தில்பாலாஜி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தவெக அரசின் முடிவு என்ன?

தவெக அரசுக்கு இது முதல் டெஸ்ட்டாக பார்க்கப்படுகிறது. ஊழலுக்கு எதிராக உரத்த குரல் கொடுத்த தவெக, அமலாகத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமா? அல்லது கடிதத்திற்கு பதில் அளிக்காமல் தள்ளிப்போடுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.

கைது, விடுவிப்பு

முன்னதாக, இந்த வழக்கின் அடிப்படையில் 2023 ஜூன் மாதத்தில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், செப்டம்பர் 2024-ல் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியதால், விடுவிக்கப்பட்டார்.

===========================