மக்களை வாட்டும் திமுக
Edappadi Palanisamy Begins ADMK Election Campaign 2026 : ‘அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்’ என ஊழலில் ஊறித் திளைத்துள்ள திமுக ஆட்சியில், மின்சாரக் கட்டணத்தினாலும், சொத்து வரி மற்றும் பல்வேறு வரிச் சுமையாலும், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் பாடுபடுகிறார்கள்.
மக்களிடம் அதிமுக பிரசாரம்
அவர்களின் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் வகையில் இன்று முதல், திமுக ஆட்சிக்கு எதிராக, ‘ ஆட்சி - உங்கள் வீட்டு பில்-லே சாட்சி’ என்ற தலைப்பில், பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
அதிமுக செயலி
தமிழக சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒவ்வொரு பூத் வாரியாக AIADMK Connect செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக, அதிமுக ஆட்சியையும் தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு பிரச்சாரம் செய்யப்படும்.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம்
இதற்காக, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த திமுக ஆட்சி கொடுத்திருக்கும் punishment bill-ஐ, இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
பூத் வாரியாக பரப்புரை
இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாகவும், அதன் தொடர்ச்சியாக, ஒன்றிய, பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாகவும் மேற்கொள்ளப்படும்.
திமுக ஆட்சியால் மக்களுக்கு பெருஞ்சுமை
நிர்வாகத் திறனற்ற இந்த திமுக ஆட்சியில், மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்றவைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகளை விளக்கிச் சொல்லும் இந்தப் பிரச்சார திட்டத்திற்கான முன்னெடுப்பும், அதனைத் தொடர்ந்து களப் பணிகளும் நடைபெறும்.
நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்
அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து, மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் இப்பணியை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
===========