Edappadi Palaniswami has said that the people of Tamil Nadu have decided to oust the DMK government https://x.com/AIADMKITWINGOFL
தமிழ்நாடு

NDA ஆர்ப்பாட்டம் : ”திமுக ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள்” : எடப்பாடி பழனிசாமி உறுதி

திமுக ஆட்சியை விரட்டி அடிக்க தமிழக மக்கள் முடிவு செய்து விட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.

Kannan

என்டிஏ கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து, என்டிஏ கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

திமுக அரசுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

மக்களை ஏமாற்றிய திமுக அரசு

‘‘2021 தேர்தலுக்காக 525 வாக்குறுதிகளை திமுக வெளியிட்டது. அதில் நான்கில் ஒரு பங்கினை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை.

இந்த உண்மையை மக்கள் புரிந்துகொண்டனர். எனவே, திமுக ஆட்சியை விரட்டியடிக்க தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர்.

மக்கள் மீது அக்கறையில்லை

தமிழகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தன் குடும்பம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில் உள்ள மு.க.ஸ்டாலின் தமிழகத்தை ஆட்சி செய்தார்.

இப்போது மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் நேரம் வந்துவிட்டது. திமுக ஆட்சி அமைந்தது முதலே ஜரூராக போதைப்பொருள் விற்பனை நடக்கிறது.

கஞ்சா விற்பனை

நம் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க வேண்டும் என்ற கனவோடு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்புகிறோம்.

ஆனால், திமுக ஆட்சியில் பள்ளிகள், கல்லூரிகள் அருகிலே நடக்கும் கஞ்சா விற்பனையால் மாணவர்கள் சீரழியும் காட்சியை பார்க்கிறோம்.

நெல்லையிலே 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மது அருந்தும் காட்சி வெளியாகி வேதனையை ஏற்படுத்தியது. இதனைப் பற்றியெல்லாம் ‘அப்பா’ ஸ்டாலின் கவலைப்படவே இல்லை.

உளவுத்துறை என்ன செய்கிறது?

குற்றங்களை கண்டறியும் உளவுத் துறை தமிழகத்தில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை குறித்து அரசுக்கு உளவுத்துறை தெரிவித்திருக்க வேண்டும்.

ஆனால், உளவுத் துறை ஸ்டாலின் குடும்பத்தின் ஏவல் துறையாக இருக்கிறது. போதை ஆசாமிகளை பிடிக்க செல்லும் காவலர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்படுகிறது.

காவல்துறைக்கு பாதுகாப்பில்லை

பயிரை காக்கும் வேலியாக இருக்கும் காவல்துறைக்கே இப்போது பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. சென்னையில் ஒரு கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்,

இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலையிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

பாலியல் கொடுமைகள்

கிருஷ்ணகிரியில் திமுகவை சேர்ந்த ஒருவர் 2 வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்த கொடுமை நடந்தது. நா

மக்கல்லில் வீதியில் விளையாடிய 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

விளாத்திக்குளத்தில் பள்ளி மாணவி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 61 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணைக்கு எதிராக திமுக அரசு மேல்முறையீடு செய்தது.

குற்றவாளிகளுக்கு துணை நிற்கும் அரசாக திமுக அரசு உள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.

=========