தமிழக சடப்பேரவை தேர்தல்
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 15ம் தேதி வெளியானது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தமிழகம் முழுவதும் பறக்கும் படைகள், நிலைக்கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகம் வரும் துணை ராணுவம்
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 250 கம்பெனி துணை ராணுவப் படையினரை தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.
இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து துணை ராணுவப் படையினர் தமிழகத்துக்கு வருகின்றனர்.
தேர்தல் அறிவிக்கை மார்ச் 30ம் தேதி வெளியிடப்பட்டு, வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
மனுத்தாக்கல் முடிய இன்னும் 2 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. நாளை மற்றும் திங்கட்கிழமை மட்டுமே மனுத்தாக்கல் செய்ய முடியும்.
தவெக சார்பில் புகார்
சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய், அங்கு பிரச்சாரத்தையும் தொடங்கினார். அனுமதி பெறப்பட்ட 4 இடங்களில் 2 இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்தார்.
மற்ற இடங்களில் காவல் துறையினர் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று பிரச்சாரத்தை ரத்து செய்தார்.
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி, உள்துறை அமைச்சகத்திற்கு தவெக சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
அனைவருக்கும் பாதுகாப்பு - தேர்தல் ஆணையம்
இதனிடையே, அக்கட்சியின் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் பங்கேற்ற கூட்டத்தில் மதுபாட்டில் வீசப்பட்டது. இது தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில், டிஜிபிக்கு கடிதம் எழுதிய தலைமை தேர்
தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அனைவருக்கும் போதிய பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
நடந்த சம்பவம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கையும் கோரினார்.
டிஜிபி வெங்கட்ராமன் மாற்றம்
இந்நிலையில், பல்வேறு உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.
அதன்படி, தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜி.வெங்கடராமன் மாற்றப்பட்டு, காவல் உயர்பயிற்சியக டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை டிஜிபியாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
டிஜிபியாக பதவியேற்றார் ரத்தோர்
புதிய டிஜிபி உடனடியாக பதவி ஏற்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதையடுத்து தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நேற்று இரவே பதவியேற்றார் சந்தீப் ராய் ரத்தோர்.
காவல்துறை தலைவரை தேர்தல் ஆணையம் மாற்றி இருப்பது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காவல் ஆணையர்களும் மாற்றம்
இதேபோன்று, தாம்பரம் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை காவல் ஆணையராக இருந்த ஜெ.லோகநாதனுக்கு பதிலாக அபிஷேக் தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த சரவண சுந்தர் மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ரம்யா பாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆட்சியர்களும் மாற்றம்
இதேபோல, சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிருந்தா தேவிக்கு பதிலாக அருண் தம்புராஜ்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்துக்கு பதிலாக விசு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட எஸ்பிக்கள் மாற்றம்
தேர்தல் தொடர்பான புகார்கள் வந்ததை அடுத்து, விருதுநகர், நாமக்கல், கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்பிக்கள் ஏற்கெனவே மாற்றப்பட்டுள்ளனர்.
பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், விரைவில் மேலும் பல ஐஏஎஸ் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
யார் இந்த சந்தீப் ராய் ரத்தோர்!
டெல்லியைச் சேர்ந்த சந்தீப் ராய் ரத்தோர் 1992ம் ஆண்டு தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர். தமிழக காவல் துறையில் பல முக்கிய பொறுப்புகள், குறிப்பாக சிபிசிஐடி மற்றும் சிஐஎஸ்எஃப் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் முக்கியப் பங்காற்றினார். ஆவடி காவல் ஆணையரகத்தின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பின்னர், சென்னை காவல் ஆணையராக பணியாற்றினார்.
2024 ஜூலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு, காவல் உயர் பயிற்சியகத்துக்கு மாற்றப்பட்டார். சிறந்த பணிக்கான மத்திய, மாநில அரசுகளின் பதக்கங்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
===================