வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்
Election Commission on SIR in Tamil Nadu : இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களை புதுப்பிக்கும் சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision – SIR) நடவடிக்கையை தொடங்கி இருக்கிறது. முதலில் பிகார் மாநிலத்தில் தொடங்கப்பட்ட இந்த திருத்தப்பணிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அங்கு சுமார் 70,000 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
சிறப்பு வாக்காளர் திருத்தம்
சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் முக்கிய நோக்கம், பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத வாக்காளர் பட்டியல்களில் உள்ள தவறுகளை நீக்குதல், இறந்தவர்கள் அல்லது முகவரி மாற்றியவர்கள் போன்றோரின் பெயர்களை அகற்றுவது என தேர்தல் ஆணையம் விளக்கி இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதை அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்ட நடவடிக்கையாக குற்றம்சாட்டி வருகின்றன.
12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தம்
இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, வாக்காளர் பெயர்கள் “அரசியல் நோக்கத்துடன்” நீக்கப்படக்கூடும் என்ற அச்சம் கட்சிகளிடையே நிலவுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இதனால், பல மாநில அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றி இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், உச்சநீதிமன்றத்தில் தடை கோரி மனுதாக்கல் செய்யும் திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.
அச்சம் வேண்டாம் - தேர்தல் ஆணையம் உறுதி
இந்த சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை (SIR) குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
நியாயமான முறையில் நடவடிக்கை
இது முறையாகவும் வெளிப்படையாகவும் நடைபெறும். எதிர்பார்த்ததை விட சிறப்பாக திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். எந்த ஒருவரின் பெயரும் அநியாயமாக நீக்கப்படாது” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்கள் சரிபார்த்து கொள்ளலாம்
பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என உறுதி செய்ய ஆன்லைன் மூலமும், அரசு அலுவலகங்கள் வழியாகவும் சரிபார்க்கலாம் என்றும் கூறியுள்ளது. தவறாக நீக்கப்பட்டிருந்தால், மக்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்ற உத்தரவையும் வழங்கியுள்ளது.
அச்சத்தை போக்கிய தேர்தல் ஆணையம்
இந்த விளக்கம் வெளிவந்ததன் மூலம், வாக்காளர் பெயர் நீக்கம் குறித்த அச்சம் ஓரளவு குறைந்தாலும், எதிர்க்கட்சிகள் இதைத் தொடர்ந்து அரசியல் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு வருகின்றன. அடுத்த சில வாரங்களில் இந்த விவகாரம் நீதிமன்றங்களிலும், அரசியல் அரங்கிலும் தீவிரமாக பேசப்படும் வாய்ப்புள்ளது.
=======