தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தனம் நிறைவுற்ற நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.
வாக்காளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 23.4.2026 அன்று தமிழ் நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று...
தமிழக வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
கட்சியினர் அனைவருக்கும் நன்றி
இரவு, பகல் பாராமல், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குப் பதிவுநாள் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றிய அதிமுகவினர், பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், இந்திய ஜனநாயகக் கட்சி...
புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் உட்பட நமது கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும்...
ஆதரவு அளித்த கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மற்றும் ஆதரவு அளித்த அனைத்து அமைப்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடிக்கு நன்றி
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் அவர்களுக்கும்...
மத்திய அமைச்சர்களுக்கும், பிற மாநில முதலமைச்சர்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக அரசு மீது மக்கள் வெறுப்பு
தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம்.
விரக்தியின் விளிம்பில் உள்ள திமுக-வினர், எப்படி புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சிகளை இந்தத் தேர்தலிலும் எடுப்பதற்குத் தயாராக உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை - கவனம் தேவை
4.5.2026 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும்...
மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி, வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சமர்ப்பிக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
முகவர்களின் கடமை
கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் மிகவும் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும்.
இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
வெற்றிக் கனியை பறிப்போம்
கோடான கோடி மக்களின் பேராதரவோடு, கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்று, வெற்றிக் கனியை 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம். இதுவே நமது நன்றிக்கடன்” என்று அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
================