தீவிர எல் நினோ
தீவிர எல் நினோ பாதிப்பு தமிழகத்தை படிப்படியாக பாதித்து வருகிறது. குறிப்பாக தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக பொய்த்து போய்விட்டது என்று சொல்லும் அளவுக்கு பெரிய அளவில் எங்கும் மழைப்பொழிவு இல்லை.
பருவநிலை மாற்றத்தால் பாதிப்பு
பருவகால சூழல் மாறுபாடுகள் உலகையே பாதித்து வரும் நிலையில், அதற்கு இந்தியாவும், தமிழ்நாடும் விதிவிலக்கு அல்ல.
வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் மிகப்பெரிய அளவில் பொழியும்.
அதன் தாக்கம் கேரள எல்லையோர தமிழக மாவட்டங்களிலும் எதிரொலிக்கும்.
கேரளாவில் இந்தாண்டு பெரியளவு தென்மேற்கு பருவமழை பொழியவில்லை. இது தமிழக எல்லையோர மாவட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அணைகள், ஏரிகள் வறண்டன
தமிழ்நாட்டில் நீர்வளத்துறையின் கீழ் 90 அணைகள், 14 ஆயிரத்து 141 ஏரிகள் கட்டுப்பாட்டில் உள்ளன.
மொத்த அணைகளின் மொத்த கொள்ளவு 224 டிஎம்சி.
சில ஆண்டுகளில் கோடை காலங்களில் தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கியது. ஆனால், இந்த ஆண்டு கோடை காலத்திலும் மழை பொழியவில்லை.
அணைகளில் 71 டிஎம்சி நீர்
224 டிஎம்சி கொள்ளளவு கொண்ட தமிழ்நாட்டின் அணைகளில் தற்போது 71.2 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது.
மொத்த தண்ணீர் கொள்முதல் அளவில் இது வெறும் 31.7 சதவீதம் மட்டுமே ஆகும். பல அணைகளில் நீர்மட்டம் மிக மிகக் குறைந்த அளவில் உள்ளது. எனவே, இந்த நீரை பாசனத்திற்கு பயன்படுத்தவே முடியாது.
பரிதாப நிலையில் ஏரிகள்
அணைகளின் நிலை இப்படி என்றால், ஏரிகளின் அதைவிட பரிதாபமாக உள்ளது.
14 ஆயிரத்து 141 பாசன ஏரிகளில் ஏற்கனவே 3 ஆயிரத்து 483 பாசன ஏரிகள் வறண்டு விட்டன.
6 ஆயிரத்து 127 ஏரிகள் வறண்டு விடும் அபாயகரமான கட்டத்தில் உள்ளன.
எஞ்சிய ஏரிகளும் போதிய மழைப்பொழிவு இல்லாவிட்டால் அதே பாதிப்பை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
தூர்வாரப்படாத அணைகள், ஏரிகள்
அணைகள் பலவும் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளது. அதேபோல, ஏரிகள் பலவற்றின் கரைகள் பலமில்லாமலும், உட்புறம் தூர்வாரப்படாமலும் உள்ளது.
நீர் சேமிப்பு அவசியம்
இந்தாண்டு முறையாக மழைப்பொழிவு இருக்காது என்று வானிலை நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், கைவசம் இருக்கும் நீரை முறையாக சேமிக்காவிட்டால் தமிழகம் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்திக்கும் அவலம் உண்டாகும்.
தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
வடகிழக்கு பருவமழையை தமிழ்நாடு பிரதானமாக சார்ந்து இருக்கும் சூழலில், பருவமழை காலம் வரை, இன்னும் மூன்று மாதங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத சூழலை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை பொய்த்தால்...
வடகிழக்கு பருவமழையும் பொய்த்துபோனால் தமிழ்நாடு இந்தாண்டு கடுமையான வறட்சியை சந்திக்கும் அபாயம் உருவாகலாம் என்று பலரும் அச்சப்படுகின்றனர்.
விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும்
ஏற்கனவே, அணை, ஏரிகள் ஆகியவற்றை நம்பியே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் நடந்து வருகிறது. வறட்சி உண்டானால் குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் பேராபத்துக்கு தமிழகம் தள்ளப்படலாம்.
12 மாவட்டங்களில் வறட்சி
தருமபுரி, அரியலூர், திண்டுக்கல், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் என 12 மாவட்டங்களில் கடுமையான வறட்சி இந்தாண்டு ஏற்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
எனவே போர்க்கால அடிப்படையில் தவெக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
===========================