ஒரத்தநாடு வைத்திலிங்கம்
OPS Supporter ADMK MLA R. Vaithilingam Join DMK : ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் வைத்திலிங்கம். நான்கு முறை இந்தத் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த வைத்திலிங்கம், அதிமுக பிளவுபட்டபோது, சசிகலாவுடன் பயணித்தார்.
அதிமுகவை ஒருங்கிணைத்தவர்
பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்த பின்னர் அவருக்கு ஆதரவாக பக்கபலமாக இருந்து செயல்பட்டார். ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் ஒருங்கிணைய வேண்டும் என்று முயற்சி எடுத்து அவர்களை ஒன்றிணைத்தார்.
ஓபிஎஸ் அணியில் வைத்திலிங்கம்
2021க்கு பிறகு மீண்டும் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வந்த பிறகு, எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நின்றார் வைத்திலிங்கம்.
எடப்பாடியை கடுமையாக எதிர்த்தவர்
எடப்பாடி பழனிசாமியை தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்து வந்தவர், நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென்ற முயற்சியை தீவிரமாக மேற்கொண்டார். ஆனால் அது கைகூடவில்லை.
வெளியேறிய ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்
அடுத்து என்ன செய்வது என்பதில் ஓ.பன்னீர்செல்வமும் சரியான முடிவு எடுக்காமல் சுணக்கம் காட்டியதால், அவரது ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் இணைந்தார்.
ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த மருது அழகுராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் சிலரும் அவரை விட்டு விலகி, திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்
நெருக்கடியாக நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரும் பக்கபலமாக, வலது கரமாக இருந்த வைத்திலிங்கமும், இன்று தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இதன்காரணமாக ஓ.பன்னீர்செல்வம் கூடாரம் முழுமையாக காலியாகி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்க முனைப்பு காட்டுவது பிடிக்காமல், அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
எம்எல்ஏ பதவி ராஜினாமா
தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த வைத்திலிங்கம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்தார். வைத்திலிங்கத்தின் மகன் பிரபுவும் திமுகவில் இணைந்தார்.
டெல்டாவில் வைத்திலிங்கம் செல்வாக்கு
வைத்திலிங்கத்தின் வருகை டெல்டா மாவட்டங்களில் திமுகவை மேலும் வலுவாக்கும் என்று தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நின்று எடப்பாடியை கடுமையாக எதிர்த்து அவரை விமர்சித்ததால், அதிமுக தலைமை அவரை கட்சியில் சேர்க்க ஆர்வம் காட்டாததால், திமுகவில் இணையும் முடிவினை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓ. பன்னீர்செல்வம் மீது விமர்சனம்
திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், “ எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் அதிமுக உகந்ததாக இல்லை.
அண்ணா தொடங்கிய கட்சியில் இணைகிறேன்
அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இணைந்து இருக்கிறேன். திமுக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. ஓ. பன்னீர்செல்வம் முடிவு எடுப்பதில் தாமதம் செய்ததால், திமுகவில் இணைந்தேன்” என்று தெரிவித்தார்.
====