28 ம் தேதி மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஜூன் 28ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (ஜூன் 25) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், ஜூன் 26, 27 தேதிகளில் தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும்
வட தமிழகத்தின் உள் பகுதிகளில் ஓரிரு இடங்களும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 28-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், ஜூன் 29, 30 தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது
அதன்படி 27 ம் தேதியில் மழைபெறும் மாவட்டங்கள்
அதன்படி தமிழகத்தில் 27-ம் தேதி கோவை மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்திலும், 28-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை,
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
சென்னை வானிலையை பொறுத்த வரையில்
சென்னை வானிலையை பொறுத்த வரையில் , புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது
மீனவர்களுக்கான அறிவுறுத்தல்
நாளையும், நாளை மறுதினமும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால்
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தலையும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
==============================