பிரசாரங்களுக்கு கடும் கட்டுப்பாடு
”How did only the DMK get permission to hold a public meeting in Tiruvannamalai?" AIADMK MP Thambidurai asked in the Rajya Sabha : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, தமிழகத்தில் பிரசாரம், பொதுக்கூட்டம், ரோடு ஷோ நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய முடியாத அளவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
அதிமுக எம்பி கேள்வி
இதுகுறித்து ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பிய அதிமுக எம்பி தம்பிதுரை, “பிரசாரம் என்பது, தேர்தல் நடைமுறைகளில் மிகவும் முக்கியமானது. மக்களை சந்திக்கும் வாய்ப்பு அதன் வாயிலாகத்தான் கிடைக்கும்.
கரூர் சம்பவத்திற்கு பின், தேர்தல் பிரசாரங்களை அரசியல் கட்சிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக, தேர்தல் பிரசார வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை
இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, கருத்துகள் கேட்கப்பட்டன. ஆனாலும், இதுவரையில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படவில்லை. இதனால், அரசியல் கட்சிகள் தமிழகத்தில் பொதுக் கூட்டமோ, பேரணியோ நடத்த முடியவில்லை. எதிர்க்கட்சிகள் மக்களிடம் சென்று பிரசாரம் செய்ய முடியவில்லை.
திமுகவுக்கு மட்டும் அனுமதி
ஆனால், திமுகவுக்கு மட்டும், திருவண்ணாமலையில் இளைஞரணி பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கி, நடத்தி உள்ளனர். தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பொதுக் கூட்டம் நடத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதிக்கும் அரசு, திமுகவுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடும் விதிக்காதது ஏன்?
ஜனநாயக உரிமைகள் பறிப்பு
ஈரோடு இடைத்தேர்தலின் போது, வாக்காளர்களை ஆடு, மாடுகளை போல பட்டியில் போட்டு திமுக அடைத்து வைத்ததால், அவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. பொதுக்கூட்டம் கூட ந டத்த முடியாத அளவுக்கு, தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
நியாயமான தேர்தல் அவசியம்
எனவே, தமிழகத்தில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெற வேண்டும். தோல்வி பயத்தில் திமுக எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சிக்கிறது” என்று தம்பிதுரை பேசினார். இதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவையில் அமளி நிலவியது.
====