ஜூலை 15-ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகளும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் இணைய தளங்களில் வேகமாக பரவி வந்தன.
இதைத்தொடர்ந்து இந்த தகவல் சில ஊடகங்களில் செய்தியாகவும் வெளியான நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த செய்தி உண்மையல்ல என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், இருசக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்க இருப்பதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளைப் பரப்புகின்றன. இன்னும் அத்தகைய எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இருசக்கர வாகனங்களுக்கு முழுமையான வரி விலக்கு தொடரும் என்று கூறியுள்ளார்.
மேலும் உண்மை என்னவென்று தெரியாமல் தவறான செய்திகளைப் பரப்புவது மற்றும் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்துவது ஆரோக்கியமான பத்திரிகையின் அறம் அல்ல என்றும் இதை நான் கண்டிக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
இருசக்கர வாகனங்களுக்கு சுங்கவரி விதிக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் தெரிவித்துள்ளது.
===