Modakkurichi Assembly Constituency History in Tamil : தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா களைகட்டி விட்டது. தேர்தல் என்றாலே வேடிக்கை, வினோதங்களுக்கு பஞ்சமே இருக்காது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஆன்லைனில் வேட்புமனு தாக்கல், டிஜிட்டல் பிரசாரம் என, தேர்தல் களை கட்டப்போகிறது.
மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி
இந்தியாவில் தேர்தல் என்றாலே மக்களை அனைவரும் சேர்ந்து கொண்டாடும் விழா தான். அந்த வகையில், 1996ம் ஆண்டு தமிழகத்தில் ஒரு சுவாரஸ்யம் நிகழ்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி என்கிற சட்டமன்ற தொகுதியில் கடந்த 1996ம் ஆண்டு தேர்தலை விசித்திரமான முறையில் சந்தித்தது.
1.033 வேட்பாளர்கள்
இந்த தொகுதியில் இருந்து 1996 சட்டமன்ற தேர்தலில் 1,033 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டார்கள். நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் நிஜம். தங்களின் 33 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட வேண்டும் என்பதை முன்னிறுத்தி, ஈரோடு மாவட்ட விவசாயிகள், தாங்களே தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தனர்.
சுயேட்சையாக விவசாயிகள் போட்டி
அந்தவகையில் 1,029 பேர் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட்டனர். மொத்தமாக 1,033 பேர் களத்தில் இருந்தார்கள். இதன் காரணமாக தேர்தல் ஆணையம் அந்த தொகுதிக்கான தேர்தலையே ஒரு மாதம் தள்ளிவைத்தது.
50 பக்கத்தில் வேட்பாளர் பட்டியல்
இந்தியாவின் தேர்தல் வரலாற்றிலேயே வேட்பாளர் பட்டியல் மட்டுமே 50 பக்கத்துக்கு இருந்தது.
வாக்காளரின் பெயரை புரட்டி பார்த்து வாக்களிக்க நேரம் ஆகும் என்பதால், மொடக்குறிச்சி தொகுதியில் மட்டும் வாக்கு செலுத்த கூடுதலாக நேரம் ஒதுக்கி தரப்பட்டது.
தலையை பிய்த்துக் கொண்ட அதிகாரிகள்
தேர்தலை நடத்தி முடிப்பதற்குள் அதிகாரிகள் ஒருவழி ஆகி விட்டார்கள் என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதுபற்றி விவரித்த விவசாய சங்கத் தலைவர்கள், ” எங்களின் கோரிக்கை அரசாங்கத்தின் காதுக்கு கேட்கணும், அவர்கள் திரும்பிப் பார்க்கணும் என்பதற்காக தான், இப்படி செய்தோம்” எனக் கூறினர்.
வெட்பாளர்களுக்கு கடும் விதிமுறைகள்
மொடக்குறிச்சியை பார்த்து மிரண்டு போன தேர்தல் ஆணையம், வேட்பாளர்களை நிறுத்துவதற்கு கடுமையான விதிமுறைகளை கொண்டு வந்தது.
1996 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரான ஆர்.என்.கிட்டுசாமி இரண்டாம் இடம் பிடித்தார். இந்த தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்ட விவசாயிகள் பெரியளவில் வாக்குகளை பெறவில்லை.
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தேர்தல்
ஆனால், தங்கள் தொகுதியை ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கச் செய்தனர். இந்தியா முழுவதும் இந்தத் தொகுதி தேர்தல் பேசுபொருளானது.
பிரச்னைகளை அரசு கேட்க முன்வரா விட்டால், இதனால் கொந்தளித்து மக்கள் ஒரு முடிவு எடுத்தால், அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு மொடக்குறிச்சி 1996 உதாரணமாக திகழ்கிறது.
=================