தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 :
Edappadi Palanisamy Thaniyarasu Meet on NDA Alliance : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளன. கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் முக்கிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போது வரை தேர்தலில் நான்கு முனை போட்டிக்கு வாய்ப்பு உள்ளது.
23ம் தேதி என்டிஏ பொதுக்கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ம் தேதி நடைபெற(NDA Alliance Public Meeting Date in Maduranthakam) உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடியுடன் தனியரசு சந்திப்பு
புதிய கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இன்று காலை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
திமுக கூட்டணியில் தனியரசு?
ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் தனியரசு சென்னை அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
அதிமுகவை விமர்சித்த தனியரசு
நவம்பரில் செய்தியாளர்களிடம் பேசிய தனியரசு, “2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இபிஎஸ் இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சியையும் சரிவையும் இழப்பையும் கட்டாயமாக சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
திராவிட முன்னேற்றக் கழகமும் அதனுடைய அணியும் மிக வலிமையான அணி. தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற அணி. அதிமுக கூட்டணியில் பத்தாண்டுகள் இருந்தோம், ஆனால் இன்று பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக மாறிவிட்டது வேதனையாக உள்ளது” எனக் கூறியிருந்தார்.
கூட்டணி மாறுகிறார் தனியரசு?
திமுக கூட்டணியில் தனியரசு இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை திடீரென அவர் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக கூட்டணியில் புதிய கட்சி இணைவதற்கான அடையாளமாகவோ அல்லது கூட்டணி மாற்றத்திற்கான பேச்சுவார்த்தையாகவே இது பார்க்கப்படுகிறது.