Auto-LPG Shortage in Chennai: Vehicles Queue Up for 3 Kilometers; Drivers in Distress! source: google
தமிழ்நாடு

LPG shortage : சென்னையில் Auto எரிவாயு தட்டுப்பாடு : 3 கி.மீ தூரத்திற்கு அணிவகுக்கும் வாகனங்கள், ஓட்டுநர்கள் வேதனை!

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆட்டோ எல்.பி.ஜி மற்றும் சி.என்.ஜி எரிவாயு கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

S Kavitha

சென்னையில் எல்.பி.ஜி மற்றும் சி.என்.ஜி தட்டுப்பாடு

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாக ஆட்டோ எல்.பி.ஜி மற்றும் சி.என்.ஜி எரிவாயு கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் எரிவாயு நிரப்ப பல மணிநேரம் காத்திருக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

விநியோகச் சங்கிலி பாதிப்பு: பின்னணி என்ன?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள விநியோகச் சங்கிலி பாதிப்புகள் காரணமாக, எல்.பி.ஜி இறக்குமதி கணிசமாகக் குறைந்துள்ளது.

எரிபொருள் போதிய கையிருப்பு இல்லாமை?

இந்த உலகளாவிய நெருக்கடி தற்போது சென்னை நகர ஆட்டோ ஓட்டுநர்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பாதித்துள்ளது.

வடபழனி, எழும்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் உள்ள பல எரிவாயு நிலையங்கள் போதிய கையிருப்பு இல்லாததால் மூடப்பட்டுள்ளன.

6 மணி நேரக் காத்திருப்பு - 3 கி.மீ நீள வரிசை

திறந்திருக்கும் ஒரு சில பங்க்குகளில் எரிவாயு நிரப்ப வாகனங்கள் அலைமோதுகின்றன. குறிப்பாக, கீழ்ப்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் பகுதிகளில் எரிவாயுவுக்காக வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் நிற்கின்றன.

ஓட்டுநர்கள் வேதனை, அதிருப்தி

மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு பங்க்-கில் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு ஆட்டோக்கள் அணிவகுத்து நின்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சில லிட்டர் எரிவாயுவைப் பெற சுமார் 6 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருப்பதாக ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஓட்டுநர்களின் வாழ்வாதாரச் சிக்கல்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால், சென்னை நகரில் உள்ள பெரும்பாலான ஆட்டோக்கள் எல்.பி.ஜி மற்றும் சி.என்.ஜி முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. ஒரு கிலோ எல்.பி.ஜி எரிவாயுவில் சுமார் 20 கி.மீ வரை ஆட்டோ இயங்கும் நிலையில், பெட்ரோலில் 8 கி.மீ மட்டுமே செல்ல முடியும்.

இது குறித்து ஓட்டுநர்கள் கூறுகையில்,

எரிவாயு நிரப்பவே எங்களது முழு நேரமும் செலவாகிவிடுகிறது. இதனால் சவாரி செல்ல முடிவதில்லை. வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டுபவர்கள், அன்றாட வாடகையைக் கூட கட்ட முடியாமல் தவிக்கிறோம் என்கின்றனர்.

மேலும் பெட்ரோல் டேங்க் சிறியது என்பதால் எங்களால் எரிவாயுவை மட்டுமே நம்பி தொழில் செய்ய வேண்டியுள்ளது எனத் தெரிவித்தனர்.

அரசின் தலையீடு அவசியம்

இந்தத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க மத்திய அரசு மாற்று வழிகளை ஆலோசித்து வந்தாலும், கள நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது.

மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஏழை மற்றும் நடுத்தர வர்க்க ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தட்டுப்பாடின்றி எரிவாயு கிடைக்க மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.

===