ராதாபுரம் சட்டமன்ற தொகுதி
2016ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரை, திமுக சார்பில் அப்பாவு போட்டியிட்டனர்.
இன்பதுரை vs அப்பாவு
வாக்கு எண்ணிக்கையில், இந்த தேர்தலில் வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என அறிவி்க்கக் கோரி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் அதே ஆண்டு தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றத்தில் அப்பாவு கோரிக்கை
தபால் வாக்கு எண்ணுவதில் முறைகேடு நடைபெற்றதாக அப்பாவு குற்றம்சாட்டி இருந்தார். எனவே, இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும், தான் வெற்றி பெற்றதாக வெளியிட வேண்டும் என்று அப்பாவு கோரியிருந்தார். .
உச்ச நீதிமன்றம் தடை
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 2019ம் ஆண்டு அக்டோர் 1ம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது. அக்டோபர் 4ம் தேதி மறு வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில், முடிவுகளை அறிவிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே 2021 மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்து விட்டதால் 2016ல் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிலுவையில் வைத்திருப்பது தேவையற்றது எனக்கூறி முடித்து வைத்தது.
அப்பாவு வெற்றி பெற்றதாக அறிவிப்பு
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த தீர்ப்பில், ”தபால் வாக்குகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பம் அளிக்க முடியும் என்பதால் மறு வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தபால் வாக்குகளில் அப்பாவு 153 வாக்குகளை பெற்றுள்ளார்.
இன்பதுரை வெற்றி செல்லாது
அதன்மூலம் 104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றுள்ளார்.எனவே அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது.
தற்போதைய சூழலில் இன்பதுரையை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றாலும், 2016- 2021 காலகட்டத்தில் சட்டப்பேரவை பதிவேடுகள் உள்ளிட்ட அரசு ஆவணங்களில் ராதாபுரம் தொகுதிஎம்எல்ஏ என்ற இடத்தில் இன்பதுரை பெயரை நீக்கிவிட்டு, அப்பாவு பெயரை இடம்பெறச் செய்ய சட்டப்பேரவைச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்பதுரை சலுகை பெறத்தடை
தவறான முறையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட இன்பதுரை இந்த காலகட்டத்துக்கு எம்எல்ஏ என்ற முறையில் பென்ஷன் உள்ளிட்ட சலுகைகளை கோர முடியாது.
தாமதம் கூடாது - நீதிபதி கருத்து
உச்ச நீதிமன்றத்தின் தலையீடு காரணமாகவே இந்த தேர்தல் வழக்கில் முடிவு எடுக்க 10 ஆண்டுகள் தாமதமாகி விட்டது. நீதிமன்றங்கள் ஏற்படுத்தும் இதுபோன்ற தேவையற்ற தாமதங்கள் ஜனநாயகத்தின் ஆன்மாவை வேரோடு வீழ்த்தி விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இதே ரீதியில் நீதித்துறையின் வருங்கால பயணம் அமைந்தால் பல நாடுகளில் நிலவும் சூழல் இந்தியாவிலும் அரங்கேறிவிடும்” இவ்வாறு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
நீதி வென்றது - அப்பாவு மகிழ்ச்சி
தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அப்பாவு ‘‘10 ஆண்டுகள் தாமதமாக இந்த தீர்ப்பு கிடைத்தாலும் எனது 10 ஆண்டுகால மன உளைச்சலுக்கு வலி நிவாரணியாக நீதி கிடைத்திருப்பது மகிழ்ச்சிதான்’’ என்றார்.
===================