Madras High Court granted anticipatory bail toUdhayanidhi and ordered his immediate release today AI generated
தமிழ்நாடு

”உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்” : முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு : விசாரணைக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தல்.!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு முன் ஜாமின் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், அவரை இன்றே விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.

Kannan

தஞ்சை திமுக ஆர்ப்பாட்டம் - உதயநிதி பேச்சு

தஞ்சையில் நடைபெற்ற காவிரி நீர் விவகாரம் தொடர்பாக த.வெ.க அரசுக்கு எதிராக தி.மு.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவதூறான கருத்துகளை பேசியதாக புகார் எழுந்தது.

9 பிரிவுகளின் கீழ் வழக்கு

அவர்மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தஞ்சை கிழக்கு காவல்துறையினர், சென்னை நீலாங்கரையிலுள்ள வீட்டிலிருந்து உதயநிதியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். சாலை வழியாக அவர் தஞ்சாவூருக்கு அழைத்து செல்லப்படுகிறார்.

திமுகவினர் போராட்டம்

உதயநிதி அழைத்து செல்லப்படுவதை கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டங்கள், சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு

இதனிடையே உதயநிதி கைது செய்யப்படுவதை தடுக்கும் விதமாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவசர வழக்காக நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

முன் ஜாமின் கேட்டு மனு

இதனிடையே அவருக்கு முன் ஜாமீன் கோரி சென்னை நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.இந்த மனுவானது பிற்பகல் விசாரணைக்கு வந்தது.

ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை

அப்போது உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணமில்லை என்றும், விசாரணைக்கு பிறகு இன்றே விடுவிக்கப்படுவார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இன்றே விடுவிக்க உத்தரவு

இதனைக் கேட்ட நீதிபதி, காவல்துறை விசாரணை முடிந்ததும் உதயநிதி இன்றே விடுதலை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, முன்பிணை வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றாலும், நிலைமையை கருத்தில் கொண்டு முன் ஜாமீன் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

முழு ஒத்துழைப்பு - உதயநிதிக்கு அறிவுரை

மேலும், காவல்துறை விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அந்த வகையில் தஞ்சாவூரில் விசாரணை முடிந்த பிறகு, உதயநிதி ஸ்டாலின் இன்று இரவுக்குள் விடுவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

====================