Major Healthcare Boost: ₹300-Crore Multi-Specialty Hospital Announced for Perambur Ai Generated
தமிழ்நாடு

பெரம்பூரில் 300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை : முதல்வர் காப்பீட்டு தொகை 25 லட்சமாக உயர்வு : சூப்பர் அறிவிப்புகள்..!

சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், பெரம்பூரில் புதிய பன்னோக்கு மருத்துவமனை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது...

NARENDRAN K

சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு :

சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 19) 110 விதியின் கீழ் முதல்வர் ஜோசப் விஜய் பேசுகையில், “ஒரு உயிரின் மதிப்பை அவரது வருமானம் தீர்மானிக்கக் கூடாது. வசதி படைத்தவர், வசதி குறைவானவர் என்ற நிலை மருத்துவத் துறையில் இருக்கக் கூடாது; அனைவருக்கும் சமமான மருத்துவ சேவை எளிதாகக் கிடைக்க வேண்டும் என்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது.

ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவதில் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் மிகக் கொடியது.

மருத்துவத்தை தேடி மக்கள் :

மருத்துவத்தைத் தேடி வரும் மக்களின் பாதையில் இருக்கும் தடைகளான வறுமை, தொலைவு, மருத்துவர் பற்றாக்குறை, மருந்துகளின் விலை, மருத்துவ விழிப்புணர்வு இல்லாமை, காத்திருப்பு, அவசரகால வசதியின்மை போன்றவற்றை படிப்படியாக அகற்றி; ஏழை – பணக்காரர், கிராமம் – நகரம் என்ற பாகுபாடு இன்றி ஒவ்வொருவருக்கும் தரமான மற்றும் எளிதான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்வதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டு நமது அரசு செயல்பட்டு வருகிறது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் சில அறிவிப்புகள் :

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் சில அறிவிப்புகளைச் சட்டமன்ற விதி 110-ன் கீழ் இன்று வெளியிட விரும்புகிறேன்.

வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில், பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.

வடசென்னை மக்கள் மகிழ்ச்சி:

பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புதிய பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படுவதன் மூலம் வடசென்னை மக்களுக்கு தரமான மற்றும் நவீன மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பை அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ள நிலையில், வடசென்னையின் சுகாதாரத் துறையில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

மருத்துவ காப்பீடு ரு. 25 லட்சம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்கு, தற்போதுள்ள ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சமாக உயர்த்தப்படும்.

திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை

திருநங்கையர்களுக்கான மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தருமபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை

தமிழ்நாட்டில், 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு, புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையில், தரமான மருத்துவ சேவைக்குத் தேவையான செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களை உருவாக்கும் வகையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூபாய் 351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.

அரசு செவிலியர் கல்லூரிகள்

7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, 660 B.Sc. செவிலியர் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள செவிலியர் கல்லூரிகள் மற்றும் செவிலியர் பள்ளிகளில் கூடுதலாக 1,925 கூடுதல் மாணாக்கர் இடங்கள், இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,778 மாணாக்கர் இடங்கள், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் என மொத்தம் சுமார் 6,098 கூடுதல் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோய்களைத் தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும், “முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்” (Chief Minister’s Cancer Care Mission) 673 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 471 கோடியே 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் G+14 தளங்களுடன் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.

மேலும், ஐந்து மண்டல புற்றுநோய் மையங்கள் (Regional Cancer Care Centres) தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவப்படும். முதற்கட்டமாக, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூபாய் 84 கோடியில் G+8 தளங்களுடன் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும்.

ரோபோடிக் அறுவை சிகிச்சை, Linear Accelerator (LINAC) கதிர்வீச்சு, நவீன கருவிகள், இலக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சைகளுக்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளுக்கு 106 கோடியே 17 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். மருத்துவர்களுக்கு பயிற்சியும், நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவும் 2 கோடியே 77 இலட்சம் ரூபாய் அளிக்கப்படும்.

மேலும், தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 1.22 லட்சம் பெண்களுக்கு 8 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் HPV DNA பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

மொத்தம் 673 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புற்றுநோய் தாக்கத்திலிருந்து மக்களை காக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.” என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.