காங்கிரஸ் எடுக்கும் பெரிய முடிவு
DMK vs Congress Alliance 2026 : திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள், அதிகாரத்தில் பங்கு என்று போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ், இப்போது கூட்டணியை விட்டு வெளியேற வேண்டிய முடிவை நோக்கி பயணிக்கிறது.
பொறுமை காக்கும் திமுக
அதிகாரத்தில் பங்கு இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியாக தெரிவித்தாலும், காங்கிரசில் தொடர்ந்து ஒலித்த குரல்கள், திமுகவை கொந்தளிக்க செய்தன.
இருப்பினும் கூட்டணியில் காங்கிரசை தக்கவைக்க திமுக பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. கனிமொழி மூலம் பேச்சுவார்த்தை, பின்னர் அறிவாலயத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை என நடத்தியது.
காங்கிரஸ் எதிர்பார்ப்பு, திமுக நிலைப்பாடு
இதனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், தொகுதி பங்கீட்டில் மீண்டும் பெரும் சிக்கல் எழுந்து நிற்கிறது.
காங்கிரஸ் 39 தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா இடங்களை எதிர்பார்க்கிறது. ஆனால் திமுகவோ 29 தொகுதிகள் ஒரு ராஜ்யசபா தான் தர முடியும் என்று உறுதியுடன் நிற்கிறது.
29 தொகுதிகளை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினுக்கு ராகுல் சம்பிரதாய வாழ்த்து
முதல்வர் ஸ்டாலின் நேற்று பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு பிரதமர் மோடி அதிகாலையிலேயே வாழ்த்து தெரிவித்து விட்டார். ஆனால், ராகுல் காந்தியோ பிற்பகல் 2 மணிக்கு பிறகே வாழ்த்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
ராகுல் நச், ஸ்டாலின் பதிலடி
அதில் "சகோதரர்" என்ற வார்த்தை இல்லை; வெறும் "தமிழக முதல்வர்" என்ற சம்பிரதாய வாழ்த்துதான் இருந்தது. பிற தலைவர்களின் வாழ்த்திற்கு ளுக்கு விரிவாகப் பதிலளித்த ஸ்டாலின், ராகுலுக்கு மட்டும் "நன்றி (Thank you for your warm wishes)" என்று மிகச் சுருக்கமாக, எந்த ஒரு கூடுதல் பாசமும் இன்றி முடித்துக்கொண்டார். "நீ தள்ளி நின்றால், நானும் தள்ளி நிற்பேன்" என காங்கிரசுக்கு கமுக்கமாக பதிலடி கொடுத்து இருக்கிறார் ஸ்டாலின்.
காங்கிரசை கழட்டி விட திமுக தயார்
"ராகுல் பிடிவாதம் பிடித்தால், காங்கிரஸ் இல்லாமல் தேர்தலைச் சந்திக்கவும் நான் தயார்.. இது ஒன்றும் லோக்சபா தேர்தல் அல்ல.. சட்டசபை தேர்தல்.. திமுக ஆட்சி வேண்டுமா வேண்டாமா என்பதற்கான தேர்தல்.. இங்கே ராகுலுக்கு வேலையே இல்லை" என்ற நிலைப்பாட்டில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது.
தேமுதிக, ஓபிஎஸ் கூடுதல் பலம்
19 ஆண்டுகளுக்குப் பிறகு தேமுதிக திமுக கூட்டணிக்கு வந்திருப்பது பெரிய பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது. இது திமுகவிற்கு வட மாவட்டங்களில் ஒரு புதிய பலத்தைக் கொடுத்துள்ளது.
தேமுதிக ஒரு பலம் வாய்ந்த.. கட்டுப்பாடில்லாத குதிரை. அதை சரியாக பயன்படுத்தினால் நல்ல பலன் தரும் என்று திமுக கணக்கு போட்டு வைத்திருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திமுக பக்கம் சாய்ந்திருப்பது, தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியான வாக்குகளைத் திரட்ட திமுகவிற்கு பேருதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
எனவே, காங்கிரஸ் இல்லாமல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க திமுக தயாராகி விட்டதாகவே தெரிகிறது.
காங்கிரசுக்கு திமுக கெடு
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக கொடுத்த ஆஃபரை ஏற்க காங்கிரசுக்கு நாளை வரை ( மார்ச் 3 ) கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஒன்று 29 தொகுதிகளை ஏற்க வேண்டும் அல்லது கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும்.
இதில் எந்த முடிவை காங்கிரஸ் எடுத்தாலும், அதனால் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ள திமுக ஆயத்தமாகி விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
----------------