மக்கள் நீதி மய்யம்
ஆட்சி மாற்றம், திமுக மாற்று என்று தொடங்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், மக்களவை தேர்தலின் போது அந்தக் கட்சிக்கே ஆதரவு கொடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.
எம்பியானார் கமல்ஹாசன்
அதன்பிறகு, திமுக சார்பில் ராஜய்சபா சீட் கொடுக்கப்பட, எம்பியானார் கமல்ஹாசன். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் ஆர்வம் காட்டியதால், நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.
சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம்
இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிடுவதாக கமல்ஹாசன் சூசகமாக தெரிவித்ததால், விருப்ப மனுவுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயை நிர்வாகிகள் கட்டினர்.
ஆனால் நடந்ததோ வேறு, திமுகவில் ஒற்றை இலக்க சீட், அதாவது 2 தொகுதி வரை தான் சான்ஸ், உதயசூரியனில் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்தம் எழ, குழப்பத்தில் ஆழ்ந்தார் கமல்ஹாசன்
தேர்தலில் போட்டியிடவில்லை - மக்கள் நீதி மய்யம்
கட்சியின் சின்னமான டார்ச் லைட்டில் தான் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் கறார் ஆக கூற, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பிறகு, சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அறிவித்தார் கமல்ஹாசன்.
நிர்வாகிகள் கடும் அதிருப்தி
இதன் காரணமாக கமல்ஹாசன் மீது கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இனி ஐந்து ஆண்டுகளுக்கு அரசியல் செய்வது எப்படி?
உள்ளாட்சி தேர்தல், 2029 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் என்ன செய்ய போகிறது? என்ற கேள்விகள் அக்கட்சி நிர்வாகிகள் இடையே எழுந்துள்ளது.
இதற்கு சரியான பதில் இல்லாததால் நிர்வாகிகள் விரக்தியில் உள்ளனர்.
மநீம விருப்ப கட்டணம் - ரூ.50,000
இதனிடையே, சட்டசபை தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
அப்போது கட்டணமாக 50 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டது. தமிழக அரசியல் கட்சிகள் யாரும் இந்த அளவு கட்டணத்தை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டணத்தை திருப்பி தராத கட்சி
60க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் விருப்ப கட்டணமாக தலா 50,000 செலுத்தினர். தேர்தலில் போட்டியிடவில்லை என்று கட்சி முடிவு எடுத்த நிலையில், அந்தப் பணம் அவர்களுக்கு இதுவரை திருப்பி வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.
புலம்பும் நிர்வாகிகள்
தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் கட்சி நடத்துவது எதற்காக? விருப்ப மனு வாங்க வேண்டிய அவசியம் என்ன?
தேர்தலில் போட்டியிடலாம் என்று நம்பிதான் இத்தனை நாட்கள் கட்சிக்காக உழைத்தொம், அப்படி இருக்கையில் விருப்ப கட்டணத்தை திரும்ப தருவது தான் நியாயம் என்று புலம்புகின்றனர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்.
=====