புயலுக்கு பெயர் சூட்டும் 13 நாடுகள்
Mantha Cyclone Meaning in Tamil : பருவமழைகளின் போது கடல் பகுதிகளில் புயல்கள் உருவாவது வழக்கம். அவற்றுக்கு பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படும். வடக்கு இந்திய பெருங்கடல், அரபிக் கடல், வங்கக் கடலில் உருவாகும் வெப்ப மண்டல புயல்களுக்கு 13 நாடுகள் பெயர் வைத்து வருகின்றன. 13 நாடுகள் தலா 13 பெயர்கள் என 169 பெயர்களை 2020 ஆம் ஆண்டு இறுதி செய்தன. வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், யேமன் ஆகிய 13 நாடுகள் பெயர் பட்டியலை கொடுத்துள்ளன. சுழற்சி முறையில் இந்தப் பெயர்கள் புயல்களுக்கு சூட்டப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வரும் 27ஆம் தேதி உருவாகும் புயலுக்கு மோந்தா என பெயரிட்டுள்ளது.
வங்கக் கடலில் ‘மோந்தா’ புயல்
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது படிப்படியாக வலிமை அடைந்து, வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து 27ம் தேதி மோந்தா புயலாக உருவாகும். வட தமிழகத்தை ஒட்டி வரும் இந்தப் புயல் ஆந்திரா நோக்கிச் சென்று மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சென்னை உட்பட வட மாவட்டங்களில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.
மோந்தா என்றால் கொந்தளித்தல்
மோந்தா என்ற பெயரை தாய்லாந்து பரிந்துரைத்து இருந்தது. Montha என்றால் Churning என்று அர்த்தம். அதாவது கொந்தளித்தல், கடைதல், நுரைத்து கலக்குதல் ஆகிய அர்த்தங்கள் கொண்டது. எனவே, இந்தப் புயலால் வங்கக் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். புயல் கரையை கடக்கும் வேகத்தை பொருத்து, சேதம் ஏற்படும். இந்த புயலால் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு, உருவான முதல் புயல் மோந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : மண்டலமாக வலுப்பெற்ற மோந்தா புயல் - வானிலை மையம் எச்சரிக்கை!
வட மாவட்டங்களில் கனமழை பெய்யும்?
மோந்தா புயல் உருவான பிறகு அக்டோபர் 26ம் தேதி விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 27ம் தேதி திருவள்ளூர், சென்னை மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
===========