சுகாதாரம்
Mayor Priya Presented Chennai Corporation Budget 2026 : இன்று பல்வேறு துறைகளுக்கு பட்ஜெட்டை அறிவித்த சென்னை மேயர் பிரியா சுகாதாரத்திற்கு என்று சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.அந்த வகையில்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 மண்டலங்களில் உள்ள 360 சுகாதார மையங்களில் கருப்பை வாய் புற்று நோய் உருவாக்கும் எச்.பி.வி. (HPV) வைரஸை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ள எச்.பி.வி, டி.என்.ஏ (HPV DNA), RTPCR கிட் 50,000 எண்ணிக்கையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும்
மருத்துவம் சார்ந்த உடைமைகள் வைக்கும் பை திட்டம்
1 முதல் 15 மண்டலங்களில் உள்ள மக்களைத்தேடி மருத்துவப் பிரிவில் பணியாற்றும் 600 களப்பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான மருத்துவம் சார்ந்த உடைமைகள் வைக்கும் பை (Medical Kit Bag) ரூ.50 இலட்சம் செலவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி
வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் திட்டத்தை அனைத்து தெரு நாய்களுக்கும் செயல்படுத்த ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
கொசுக்களை கட்டுப்படுத்த ரூ.25 கோடி
கொசுப்புழு அடர்த்தியை நிகழ்நேர கண்காணிப்பு (Real time Monitoring) செய்வதற்கு மூன்று ஆண்டுகளுக்கு, ஆண்டொன்றிற்கு சுமார் ரூ.25 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம்
கோடைக் காலங்களில் வெயிலின் தாக்கத்தை போக்கவும், நீர்ச்சத்தை பராமரிக்கவும், உடல் வெப்பத்தை தணிக்கவும், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து நிரந்தர, தற்காலிக மற்றும் நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கும் குளிர்ச்சியான மோர் வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார் .
பூங்கா மற்றும் விளையாட்டு
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பூங்காக்களில் 200 பூங்காக்களை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் முதற்கட்டமாக அறிவியல் பூர்வமாக பொலிவேற்றம் செய்வதற்கு ரூ.60 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பூங்காக்களில், மழை நீர் சேகரிப்பு (Rain Water Harvesting) திட்டம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் .
மெரினாவில் ரோப் கார் திட்டம்
மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை பொது தனியார் பங்களிப்பு (PPP) முறையில் கயிறு வழித்தடம் (Rope way car) அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
இவ்வாறாக பல துறைகளுக்கு பல திட்ட செயல்பாடு முறைகளை சென்னை மாநகராட்சி மேயர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.