மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
திமுக கூட்டணியில் நீண்ட காலமாக இருக்கும் கட்சிகளில் ஒன்று வைகோ தலைமையிலான மதிமுக. திமுக கூட்டணியில் இருந்து பிரதான கட்சிகள் அடுத்தடுத்து விலகிய நிலையில், மதிமுக மட்டும் நீடித்தது.
திமுக கூட்டணியில் மதிமுக
காரணம் சட்டமன்ற தேர்தலில் மதிமுக 2 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், உதய சூரியனில் போட்டியிட்டதால், விலகினால் கட்சி தாவல் தடை சட்டம் பாயும் என்பதால் தயக்கம் ஏற்பட்டது.
தவெக மீது பாசம்
இதனிடையே, தொடர்ச்சியாக தவெகவை பாராட்டி பேசி வரும் மதிமுக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேற தயாராகி விட்டதாகவே தெரிகிறது.
வெளியேறும் மதிமுக
27ம் தேதி நடைபெற இருக்கும் மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார் வைகோ.
மதிமுக மீது திமுக கோபம்
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிஷ்டவசமானது என்று வைகோ மகன் துரை வைகோ பேசியது, திமுகவினரை கொந்தளிக்க செய்தது.
திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற மதிமுகவை சேர்ந்த இரண்டு பேரையும் ராஜினாமா செய்ய வைத்து, இடைத்தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடவும் வைகோ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
சோதனை காலம் நிறைவு
இந்தநிலையில், நெல்லிக்குப்பத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “மதிமுகவுக்கு சோதனை காலம் எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது. நம்முடைய கட்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது.
மதிமுகவுக்கு இனி வசந்தகாலம்
தொண்டர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கின்றனர். அவர்களுடைய மனதில் காயங்கள் உள்ளது. பனிகாலம் முடிந்தால் வசந்தகாலம் வந்துதான் ஆக வேண்டும். நமக்கு பனிக்காலம் நீங்கும் வேலை நெருங்கி விட்டது.
வசந்த காலம் அதன் கரங்களை நீட்டி நம்மை அரவணைக்க போகிறது என்பதை இங்கு வைத்து தெரிவித்து கொள்கிறேன்.
நடப்பவை நல்லவையாக இருக்கும்
அடுத்து என்ன நடக்கும் என்று கழகத்தில் உள்ளவர்கள் சங்கடப்பட வேண்டும். நடப்பவைகள் எல்லாம் இனிமேல் நல்லவையாகவே நடக்கும்.
உயர்நிலைக் குழுவில் உரிய முடிவு
இன்னும் இரண்டே நாட்களில் மதிமுகவின் பொதுக்கூட்டம் கூடவுள்ளது. அங்கு தக்க முடிவுகள் எடுக்கப்படும். தொண்டர்களுடைய மன ஓட்டங்களை அறிந்து, அதன்படி நாங்கள் நடப்போம். கடந்த, 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் தொடர்ந்து வந்தோம்.
நமக்கு போதிய அங்கீகாரம் இல்லை
ஆனால் நமக்கு போதுமான சீட் கிடைக்கவில்லை. தனி சின்னத்தில் போட்டியிடவும் முடியவில்லை. நமக்காக அங்கீகாரம் கூட்டணியில் இல்லை என்பதால் தொண்டர்கள் மன வேதனையில் உள்ளனர்” என்று பேசி இருக்கும் வைகோ, திமுக கூட்டணியில் இருந்து வெளியேற இருப்பதை போட்டு உடைத்து இருக்கிறார்.
==========================