தீவிரம் பெற்ற மோந்தா புயல்
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று மோந்தா புயலாக மாறியது. சென்னை அருகே கரையை கடக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், புயலானது திசைமாறி, ஆந்திர மாநிலம் காகிநாடா நோக்கி நகர்ந்து செல்கிறது.
விமானங்கள், ரயில்கள் ரத்து
இன்று காலை தீவிரம் பெற்ற மோந்தா புயல், ஆந்திராவை நெருங்குவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சென்னை- ஆந்திரா இடையே 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் 75 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ஆந்திரா காக்கிநாடா அருகே கரையை கடக்கவுள்ள நிலையில் காக்கிநாடா துறைமுகத்தில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம், கிருஷ்ணாபட்டினம் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
இரவு கரையை கடக்கும் புயல்
இன்று மாலை அல்லது இரவில், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 90 -100 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு 110 கி.மீ., வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்று வானிமை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை
ஆந்திராவில் புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
ஆந்திராவில் மக்கள் வெளியேற்றம்
ஆந்திராவில் புயலால் பாதிப்பு ஏற்படும் என வானிலை மையம் கணித்துள்ள பகுதியில் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நிலைமையை கண்காணிக்க உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை முதல்வர் சந்திரபாபு நாயுடு நியமித்துள்ளார்.
ஆந்திராவில் உஷார்நிலை
ஆந்திராவில் மோந்தா புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் வீட்டிற்குள்ளே இருக்கவும், கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மின்வினியோகத்தை நிறுத்தி, நிலைமை சீரானது மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, ஒடிசாவில் ரெட் அலெர்ட்
மோந்தா புயல் காரணமாக, ஆந்திராவில் காக்கி நாடா, விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் உட்பட 14 மாவட்டங்களில், இன்று அதி கனமழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரகாசம், கர்னுால், திருப்பதி உட்பட எட்டு மாவட்டங்களில், மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அனந்தபுரமு, ஸ்ரீசத்யசாய், அன்னமையா, சித்துார் ஆகிய மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதே போன்று ஒடிசாவிலும், பெரும்பாலான கடலோர மாவட்டங்களில், அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
====