கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணை ஆவணங்கள் எரிப்பா?
இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழுவின் ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்படுவதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணை முடியும் முன்பே வழக்கு தொடர்பான காகிதங்களை அழிக்க அனுமதி தந்தது யார், விசாரணை நடத்தப்பட்ட இடத்திலேயே பென்-டிரைவையும் எரிக்கும் அளவுக்கு அப்படி என்ன நிர்ப்பந்தம் ஏற்பட்டது? அவசர கதியில் சிறப்பு புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்த உடனேயே ஆவணங்கள் அழிக்கப்பட்டது ஏன்?.
யாரை காப்பாற்ற அரசு முயல்கிறது
ஆவணங்களை அழிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமோ, ஏதேனும் சட்டமோ கூறுகிறதா விசாரணை முடியும் முன்னரே சிறப்பு புலனாய்வுக் குழுவினர் முதல் அரசு அதிகாரிகள் வரை ஒருதலைபட்சமான கருத்துகளை ஆர்வமாக தெரிவித்த நிலையில், தற்போது ஆவணங்கள் எரிக்கப்பட்டது எதை மறைக்க, யாரை காப்பாற்ற?
திமுக அரசு மீது சந்தேகம்
கரூர் துயரச் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு முதலில் மறுத்தது, சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர்கள் அவசர கதியாக மாற்றி மாற்றி கருத்துகளை தெரிவித்தது, தற்போது ஆவணங்கள் எரிக்கப்பட்டது என, இவை அனைத்தும் திமுக அரசு எதையோ மறைக்க முயற்சிப்பதையே சுட்டிக் காட்டுகின்றன.
உண்மையை யாரும் மறைக்க முடியாது
உண்மை எப்போதும் உறங்காது. தமிழக பாஜக உறங்கவும் விடாது. எனவே, வழக்கம்போல வாய்ப்பூட்டு அணிந்து திசைதிருப்பு நாடகங்களில் ஈடுபடாமல், ஆவணங்கள் எரிக்கப்பட்டது தொடர்பாக திமுக அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்” இவ்வாறு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
==============