தேசிய ஜனநாயக கூட்டணி விமர்சனம்
narayan tirupati twitter திராவிட மாடல் ஆட்சியில், தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதாக தேசிய ஜனநாய கூட்டணி கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்து, தமிழக முதல்வரின் எக்ஸ் கணக்கை மேற்கோள்காட்டி கேள்வி எழுப்பியும், கண்டனங்களை பதிவு செய்தும் வருகின்றனர்.
நாராயணன் திருப்பதி எக்ஸ் தள பதிவு
அதன் ஒரு பகுதியாக,தமிழக பாஜகவின் தலைமை செய்திதொடர்பாளர் நாராயணன் திருப்பதி, வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,சென்னை கோவளத்தில் தனியார் ஹெலிகாப்டர் போக்குவரத்து நிறுவனத்தினரை மிரட்டி லஞ்சம் கேட்டதாகவும் , குண்டர்களை வைத்து தங்களை அலுவலகத்திற்க்குள் சிறை வைத்ததாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி மீது அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தமிழக சபாநாயகர் அப்பாவுவிடம் புகார் அளித்ததாக செய்தியை காண நேர்ந்தது.
இது குறித்து கேட்டதற்கு, அந்த ஹெலிகாப்டரை இயக்கும் பைலட்டுக்கு லைசென்ஸ் உள்ளதா, ஹெலிகாப்டர் எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது? அதற்கு காப்பீடு உள்ளதா என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாததால் தான் இந்நிலை என்று சட்டமன்ற உறுப்பினர் கூறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் தமிழகம் தடுமாறிக்கொண்டிருக்கிறது
மேலும், மத்திய, மாநில அரசுகளின் அனுமதியோடு செயல்படும் நிறுவனத்தை கேள்விகேட்டு மிரட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று பதிவிட்டுள்ள அவர் மிரட்டி லஞ்சம் கேட்பதும், துன்புறுத்துவதும் பெரும் குற்றம். இது குறித்து சபாநாயகரிடம் புகார் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது? காவல்துறையினரிடம் புகார் அளிக்கவில்லையா? அல்லது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? என்பது போன்ற கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கமளிப்பதோடு, துரித விசாரணை நடத்தி சட்டமன்ற உறுப்பினர் மீது உரிய பிரிவுகளில் வழக்கு பதிய உத்தரவிட வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து சட்டம், ஒழுங்கை சட்டமன்ற உறுப்பினர்களே சீர்குலைக்கும் அளவிற்கு திராவிட மாடல் திமுக ஆட்சியில் தமிழகம் தடுமாறிக்கொண்டிருப்பது வெட்கக்கேடு என்றும் பதிவிட்டுள்ளார்.