நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும், பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை வருகின்றனர். அதன்படி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்று ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று மக்களை நேரில் சந்தித்து, நிறை, குறைகளை கேட்டறிந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்திக்கும் அவர், தன்னுடைய கருத்துகளையும் கூறி, அறிக்கைகளையும் விட்டு வருகிறார்.
நயினார் நாகேந்திரன் அறிக்கை
அதன்படி அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணியை தேர்தல் கமிஷன் துவங்கும் தகவல் வந்ததும் அலறும் முதல்வர் ஸ்டாலினுக்கு வரலாற்றை நினைவூட்ட விரும்புகிறேன். கடந்த 2017ம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலின் போது, போலி வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது மறந்துவிட்டதா?
காங்கிரஸ் காலத்திலும் வாக்காளர் திருத்தம்
மறைந்த ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் துவங்கி காங்கிரஸ் ஆட்சியில் மொத்தம் 10 முறை வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்றது முதல்வருக்குத் தெரியாததா என்ன? இப்படி ஆண்டாண்டு காலமாக நடக்கும் தேர்தல் கமிஷனின் வழக்கமான நடைமுறையை ஏதோ புதிய முறை போல காட்சிப்படுத்த முயற்சிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகாரிகளை சந்தேகிக்கிறதா திமுக அரசு?
மேலும், திருத்தப் பணியில் ஈடுபடப்போகும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி முதல் மாவட்ட கலெக்டர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் வரை அனைவரும் தமிழக அரசின் கீழ் பணியாற்றுவோர் தான். அப்படி இருக்கையில் தமிழக அரசு அதிகாரிகளை நேர்மையற்றவர்கள் என்று சந்தேகிக்கிறதா திமுக அரசு?
திமுகவின் தோல்வி நிச்சயம்
தமிழகத்தில் வங்கதேசத்தினர் ஊடுருவல் அதிகமாகியிருக்கும் வேளையில், அவர்கள் வாக்காளராக உருமாறுவதைத் தடுக்கத் தான் இந்த வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறதே தவிர தமிழக வாக்காளரை நீக்குவதற்கு அல்ல என்பது தங்களுக்கும் தெரியும். எனவே மழை வெள்ள பாதிப்புகள் தொடங்கி பயிர் கொள்முதல் செய்யாமை, தரமற்ற சாலைகள், குடிநீர் தட்டுப்பாடு, பள்ளிக்கரணை ஊழல் போன்ற திமுக அரசின் தவறுகளை மறைக்க வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியை கையில் எடுத்து, பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்.
மக்களை ஏமாற்றவே முடியாது
எவ்வளவு மடைமாற்றினாலும் மக்கள் எதையும் மறக்கவும் போவதில்லை, மனம் மாறப்போவதுமில்லை. திமுகவின் தோல்வி நிச்சயம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.