O. Panneerselvam, who has been left alone in Tamil Nadu politics, is struggling to decide whether to join the DMK or the TDP. 
தமிழ்நாடு

தனித்து விடப்பட்ட OPS: அறிவாலயம்!பனையூர்! திக்கு தெரியாமல் தவிப்பு

தமிழக அரசியலில் தனித்து விடப்பட்டு இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், திமுகவுக்கு செல்வதா, தவெக பக்கம் போவதா எனத் தெரியாமல் தவித்து வருகிறார்.

Kannan

ஓ. பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அரசியலில் ஆளுமை மிக்கவராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவுக்கு இடர்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரண்டு முறையும், அவரது மறைவிற்கு பிறகு, ஒரு முறையும் முதல்வராக பதவி வகித்தார்.

ஜெயலலிதாவின் விசுவாசி

அதிமுகவின் பொருளாளராக இருந்து கட்சியை வழி நடத்தியவர். ஜெயலலிதா, சசிகலாவின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஒ. பன்னீர்செல்வம், பின்னர் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றார்.

தேர்தல் தோல்வி - மாறிய அரசியல்

அதன்பிறகு பாஜக மேற்கொண்ட முயற்சியால், மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி, துணை முதல்வர் பதவியை அலங்கரித்தார்.

2021 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடியுடன் ஏற்பட்ட மோதல், அவரை கட்சியில் இருந்து தூக்க வைத்தது.

உரிமை மீட்புக் குழு

அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை தொடங்கி, மீண்டும் கட்சியில் சேர ஓ.பன்னீர்செல்வம் பெரும் முயற்சிகளை செய்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக நின்றதால், இன்றுவரை அவரால் அதிமுகவில் காலடி எடுத்து வைக்கவில்லை.

அதிமுகவால் கைவிடப்பட்ட ஓபிஎஸ்

எடப்பாடியை கடுமையாக விமர்சித்த தினகரன் கூட இப்போது என்டிஏ கூட்டணியில் இணைந்து விட்டார். எடப்பாடியுடன் ராசியாகி, தங்களுக்கு பங்காளி சண்டை இருந்தது, அது முடிந்து விட்டது என்கிறார். ஆனால், ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க எடப்பாடி எப்போதும் தயாராக இல்லை.

தனித்து நிற்கும் ஓ பன்னீர்செல்வம்

இதன் காரணமாக ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் படிப்படியாக திமுக, தவெக, அதிமுகவுக்கு சென்று விட்டனர். இதனால், தனிமரமாக நிற்கிறார் ஓ பன்னீர்செல்வம்.

பிரிந்து சென்ற ஆதரவாளர்கள்

மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் திமுகவில் சேர்ந்து விட்டனர். தர்மர் எம்பி, மீண்டும் எடப்பாடி பக்கம் வந்து விட்டார். சேர்ந்துட்டாங்க.. இப்போதைக்கு ஓபிஎஸ் உடன் ஐயப்பன் எம்எல்ஏ மட்டுமே உள்ளார்.

ஓ பன்னீர்செல்வம் ஆதங்கம்

இதன்காரணமாக அடுத்து என்ன செய்வது என தனது ஆதரவாளர்களுடன் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

தினகரனை சேர்த்து கொண்ட எடப்பாடி, தன்னையும், சசிகலாவையும் சேர்க்க கூடாது என்பதில் திடமாக இருக்கிறார். பாஜகவும் அதை கண்டுகொள்ளவில்லை என்பது ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதங்கமாக உள்ளது.

ஓ பன்னீர்செல்வத்திற்கு இரண்டே சாய்ஸ்

எனவே, ஓ பன்னீர்செல்வத்திற்கு இப்போது இரண்டு சாய்ஸ் மட்டுமே இருக்கிறது. ஒன்று திமுக, இன்னொன்னு விஜய் கூட்டணி

திமுக கூட்டணிக்கு இப்ப இருக்கிற உரிமை மீட்பு கழகம் பெயரிலேயே போய் சேரலாம்.. நானும் ஐயப்பனும் 2 எம்எல்ஏக்கள் இருப்பதால், 3 சீட் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம்.

தவெக கதவும் திறந்தே தான் இருக்கிறது. விஜய்கிட்ட போனால் அதிகமா சீட் கிடைக்கும். ஆனா, வெற்றி உறுதியா என்ற நம்பிக்கை இல்லை. என்ற குழப்பத்தில் ஓ. பன்னீர்செல்வம் தவிக்கிறார்.

பலத்த யோசனையில் ஓ பன்னீர்செல்வம்

திமுகவுக்கு போனால் அதிமுகவை எதிர்க்க வேண்டி இருக்கும். விஜய் பக்கம் போனால், மூன்று முறை முதல்வராக இருந்த தான், அவரை முதல்வர் வேட்பாளர் என்று கூறி பிரசாரம் செய்ய வேண்டி வரும், இரண்டையும் அதிமுகவினர் கடுமையாக விமர்சிப்பார்கள் என்பதால், பெரும் யோசனையில் ஆழ்ந்து இருக்கிறார் ஓ பன்னீர் செல்வம்.

=======================