தமிழக சட்டமன்ற தேர்தல்
234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டமன்றத்திற்கு வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான மனுத்தாக்கல் 6ம் தேதியோடு நிறைவு பெறுகிறது.
மனுத்தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் அவகாசம் உள்ளது. தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரசை தவிர்த்து, மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டு களத்திற்கு வந்து விட்டன. வேட்புமனு தாக்கலும் நடைபெற்று வருகிறது.
பாஜக, காங்கிரஸ்
ஆனால், பாஜக தனக்கான 27 வேட்பாளர்கள், காங்கிரஸ் கட்சி 28 வேட்பாளர்களின் பெயர்களை இதுவரை அறிவிக்கவில்லை. தொகுதி இறுதி செய்யப்பட்டு விட்டாலும், இழுபறி நீடிக்கிறது.
திமுக, அதிமுக
160க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை அறிவித்த திமுக, அதிமுக பிரசாரத்தை முடுக்கிவிட்டு இருக்கும் நிலையில், இரட்டை இலக்க தொகுதிகளை பெற்று இருக்கும் தேசியக் கட்சிகள் ஏன் தாமதம் செய்கின்றன, திணறுவதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
தமிழக பாஜக
பாஜக வேட்பாளர் பட்டியலைப் பொறுத்தவரை கோவை வடக்கு தொகுதி யாருக்கு என்பதில் வானதி சீனிவாசனுக்கும் அண்ணாமலைக்கும் இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
கோவை தொகுதி தனக்கு வேண்டும், அண்ணாமலையை மொடக்குறிச்சியில் நிற்கச் சொல்லுங்கள் என்று வானதி தரப்பு கூறுகிறது. ஆனால், அண்ணாமலை தரப்பு கோவை வடக்கு தான் வேண்டும் என்று உறுதியாக இருக்கிறது.
தமிழக காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அதன் உட்கட்சிப் பூசல் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. வேட்பாளர்கள் தேர்வு ஒருதலைப் பட்சமாக நடந்து வருவதாகவும், பணம் பெற்று வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் வெளிப்படையாகவே பேசினர்.
ராகுல் காந்தி ஆவேசம்
இதுகுறித்து அறிந்த ராகுல் காந்தி, கடும் கோபத்தில் இருப்பதாகவும், ஏற்கனவே அனுப்பப்பட்ட பட்டியலை அவர் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
புதிய பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் அடிப்படையில் இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
புயல் வேகத்தில் எடப்பாடி, ஸ்டாலின்
திமுக, அதிமுக தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் ஆளாக அதிமுகதான் தொகுதிப் பங்கீட்டை முடித்தது. தேர்தல் அறிக்கையையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு, பரபரப்புரையை தீவிரப்படுத்தி விட்டார்.
திமுக வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வேகம் காட்டி வருகிறார்.
ஆனால் காங்கிரசும், பாஜகவும் போட்டியிடும் தொகுதி எது என்று தெரிந்தாலும், வேட்பாளர் பெயர் தெரியாததால் அக்கட்சி தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் சுணக்கமாக உள்ளனர்.
என்ன செய்ய போகின்றன தேசியக் கட்சிகள்
வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கின்றன. சனி மற்றும் திங்கட்கிழமை மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு தொகுதியில் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினரோடு இணைந்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு பிரசாரம் செய்ய வேண்டும்.
அதன்பிறகு, தேர்தலுக்கு என்று பார்த்தால் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும். எனவே, பாஜகவும், காங்கிரசும் திராவிட கட்சிகளை நம்பி மட்டுமே தேர்தலை எதிர்கொள்வதாக, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
======================