Petrol Pump Owners Association President Murali stated that there is no shortage of petrol, diesel in Tamil Nadu google
தமிழ்நாடு

தமிழகத்தில் “பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை” : 21 நாட்களுக்கு கையிருப்பு : பங்க் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முரளி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Kannan

13வது நாளாக நீடிக்கும் போர்

ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் 13வது நாளாக நீடிக்கிறது. ஹோர்முஸ் நீரினையை ஈரான் மூடி வைத்து இருப்பதால், கச்சா எண்ணெய் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளது.

எரிவாயு தட்டுப்பாடு

வளைகுடா நாடுகளில் இருந்து எல்பிஜி கொண்டு வருவதும் நிறுத்தப்பட்டு இருப்பதால், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வணிக சிலிண்டர்கள் சப்ளை நிறுத்தப்பட்டு இருப்பதால், ஓட்டல்கள், தேநீர் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. உணவுகளுக்கான மெனுக்களும் குறைக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்தாலும், மக்கள் பீதி காரணமாக, சிலிண்டர் புக்கிங் செய்து வருகிறார்கள்.

வதந்தியால் பரபரப்பு

இதனிடையே, பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு வரக்கூடும் என்ற வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. தேவையான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பில் இருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.

இதனிடையே, இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரினை வழியாக செல்ல ஈரான் அனுமதி வழங்கி இருக்கிறது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இது சாத்தியமாகி உள்ளது.

பெட்ரோல் பங்குகள் - அலைமோதும் கூட்டம்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக வாகன ஓட்டிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப, பங்குகளில் குவிந்து வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை

பல மணி நேரம் காத்திருந்து, டேங்குகளை முழுமையாக நிரப்பி செல்கிறார்கள் வாகன ஓட்டிகள். இதன் காரணமாக அசாதாரண சூழல் நிலவுகிறது.

இதுபற்றி விளக்கம் அளித்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க தலைவர் முரளி, “ தமிழகம் முழுவதும் எண்ணெய் நிறுவனங்களால் தேவையான அளவுக்கு பெட்ரோல், டீசல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தட்டுப்பாடு என்பது வதந்தி

தட்டுப்பாடு என்பது வதந்தி தான். வாகன ஓட்டிகள் நம்ப வேண்டாம். வாகனங்களில் பெட்ரோல், டீசல் போட்டாலே போதும். கேன்களில் பெட்ரோல், டீசல் வாங்கிச் செல்வது தேவையில்லாதது.

சென்னை முதல் குமரி வரை எந்த பெட்ரோல் பங்க்குக்கு போனாலும் பெட்ரோல், டீசல் போட்டுக் கொள்ளலாம்

21 நாட்களுக்கு கையிருப்பு

பொதுமக்கள் தேவையின்றி அச்சப்பட வேண்டாம். சமையல் சிலிண்டர்களுக்கு தான் தட்டுப்பாடு உள்ளது; பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை.

7,000 பெட்ரோல் பங்க்குகளில் 21 நாட்களுக்கு எரிபொருள் கையிருப்பில் உள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள்

வாகன ஓட்டிகள் அதிக அளவில் பெட்ரோல், டீசலை நிரப்பி செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம் என்று, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முரளி கேட்டுக் கொண்டார்.