என்டிஏ, அதிமுக கூட்டணி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்வதில் முக்கிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அதிமுக, என்டிஏ கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பிறகு அமமுக இணைந்து விட்டது. தினகரனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவிக்க, அவர் பதிலுக்கு நன்றி தெரிவித்து இணக்கத்தை தெரிவித்து விட்டார்.
என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டம்
என்டிஏ கூட்டணி சார்பில் முதல்முறையாக பிரமாண்ட பொதுக் கூட்டம் சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நாளை ( 23ம் தேதி ) நடைபெற இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர்கள், அன்புமணி, தினகரன், ஜி.கே. வாசன், பாரிவேந்தர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கிறார்கள்.
எடப்பாடியை சந்தித்த பியூஷ் கோயல்
தினகரன் கூட்டணிக்கு வந்துவிட்ட நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னையில் தங்கி இருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பியூஷ் கோயல் சந்தித்து காலை உணவு அருந்தினார்.
தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தினோம். நாளை நடைபெறும் பொதுக்கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டமாக இருக்கும்.
5 லட்சம் பேர் பங்கேற்பு
இந்தப் பொதுக்கூட்டத்தில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். இந்த தொடக்கம் எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு அச்சாணியாக அமையும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. இன்று சிறுமிகள், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
திமுக அரசு படுதோல்வி
திமுக அரசு எல்லா துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது, எல்லா துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. இந்த ஆட்சியில் சுமார் ரூ.4 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.
எங்கள் கூட்டணி மிக வலிமையான கூட்டணி. இந்தியா எதிர்காலத்தில் வல்லரசாக மாற பிரதமர் மோடி அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.
அதிமுக ஆட்சி அமையும்
2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். தமிழகத்தில் அமையவுள்ள அதிமுக ஆட்சியில் தமிழகம் இதுநாள் வரை இல்லாத வளர்ச்சியை காணும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஊழல் ஆட்சி வீழ்த்தப்படும்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பியூஷ் கோயல், “ எடப்பாடி என்னுடைய நீண்ட கால நண்பர். அவருக்கு பிரதமர் மோடியும், அமித் ஷாவும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.
தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்
ஊழல் நிறைந்த திமுக ஆட்சி வீழ்த்தப்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சியில் ஊழலை தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை. இதை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
=================