PMK Founder Ramadoss letter to his followers, confidently stated that the vehicle for us has arrived Google
தமிழ்நாடு

”கிடைக்கும் வாகனத்தில் போக முடியாது, நமக்கான வாகனம் வந்து விட்டது” : தொண்டர்களுக்கு ராமதாஸ் மடல்

PMK Founder Ramadoss Statement : நமக்கான வாகனம் அருகே வந்து விட்டது என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ராமதாஸ் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Kannan

ராமதாஸ் vs அன்புமணி

PMK Founder Ramadoss Statement : பாமக நிறுவனர் ராமதாசும் அவரது மகன் அன்புமணியும் தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர். அன்புமணி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். ராமதாஸ் எந்த கூட்டணியில் இடம் பெறுவார் என்பது இதுவரை தெளிவாகவில்லை.

எங்கு செல்வார் ராமதாஸ்

அன்புமணி இருப்பதால், அதிமுக கூட்டணிக்கு ராமதாஸ் வர முடியாது. திமுக கூட்டணிக்கு செல்லலாம் என்றால், விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு இருக்கிறது. தவெக கூட்டணிக்கு செல்ல ராமதாஸ் தயக்கம் காட்டுகிறார்.

அன்புமணிக்கே ‘மாம்பழம்’

இதனிடையே, பாமக சின்னம் அன்புமணிக்கே உரியது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது, ராமதாசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால், அவருடன் இருப்பவர்களும் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல், குழப்பத்தில் உள்ளனர்.

தொண்டர்களுக்கு ராமதாஸ் மடல்

இந்தநிலையில், தொண்டர்களுக்கு ராமதாஸ் மடல் ஒன்றை எழுதி இருக்கிறார். ‘‘என் உயிரினும் மேலான, என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம். நான் நலம்! நீங்கள் நலம்தானே! எப்போதும் எல்லோரும் என்னோடுதான் அணிவகுக்கின்றீர்கள். அணிவகுப்பீர்கள்.

பாமக கடந்து வந்த பாதை

நாம் சற்றே நம் கடந்த காலத்தை திரும்பி பார்ப்போம். சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் 2 இட ஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை நாம் தான் போராடி வென்றெடுத்தோம்.

சாதி, சமய, ஒற்றுமையுடன் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம்.

செல்ல வேண்டிய, வெல்ல வேண்டியவை

இன்னும் வெல்ல வேண்டியவை பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே மாதிரியான கல்வி, ஒரே மாதிரியான தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம்.

விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி, நெரிசலற்ற போக்குவரத்திற்கான சாலைகள், பண வீக்கமற்ற பொருளாதார வளர்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன.

நமது பலம் குறையவில்லை

நம் பலம் அப்படியேதான் உள்ளது. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம். சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை.

தொண்டர்களுக்கு கலக்கம்

உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்க வேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது.

நமக்கான வாகனம் வந்து விட்டது

நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்க போகிறோம். நம் இலக்கை அடைந்து லட்சியத்தை வெல்வோம்.

எப்போதும் இணைந்தே இருப்போம். தொடர்ந்து உங்களோடு பேசுவேன்’’ என்று அந்த கடிதத்தில் தொண்டர்களை உற்சாகப்படுத்தி, நம்பிக்கையூட்டி இருக்கிறார் ராமதாஸ்.

===============