அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பதிவு
Anbumani Ramadoss Condemns DMK on Ganja Issue : திமுகவின் அவலங்கள் குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
கொடிகட்டி பறக்கும் கஞ்சா
இதன் ஒரு பகுதியாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் , ’’ஊட்டி மத்தியக் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் நசீர் அகமது என்பவர் கஞ்சா மொத்த வணிகம் செய்தததாக கைது செய்யப்பட்டிருப்பதும், அவரிடம் கஞ்சா வாங்கி பயன்படுத்தியதாக அதே ஊட்டியில் காவலர்களாக பணியாற்றி வரும் அபிசேகரன், மாயக்கண்ணன், சாந்தக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
காவலர்களே கஞ்சா வணிகம் செய்தால்?
இதைத்தொடர்ந்து, வேலியே பயிரை மேய்வதா?கஞ்சா வணிகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல் துறையினரே கஞ்சா விற்பனையாளர்களாகவும் நுகர்வோராகவும் மாறியிருப்பதிலிருந்தே தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் எந்த அளவுக்கு முதன்மைத் தொழிலாக மாறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், வேலியே பயிரை மேய்வதைப் போல காவலர்களே கஞ்சா வணிகம் செய்தால் கஞ்சாவை எப்படி கட்டுப்படுத்த முடியும்? என்ற வினாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் விடையளிக்க வேண்டும்.
கஞ்சா வணிகம் தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது
இன்னொரு புறம் சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவரின் புத்தகப் பையை ஆசிரியர்கள் சோதனையிட்ட போது அதில் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கைகளில் கஞ்சா
பள்ளியின் விளையாட்டுத் திடலில் கஞ்சா பொட்டலம் கிடந்ததாகவும், அதை எடுத்து பையில் வைத்திருந்ததாகவும் அந்த மாணவர் கூறியிருக்கிறார். மாணவர்களின் கைகளில் கிடைக்கும் அளவுக்கு கஞ்சா பொட்டலங்கள் மலிந்து கிடப்பது தான் திமுக ஆட்சியின் மகத்தான சாதனை ஆகும்.
ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே கஞ்சா வணிகம் தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது.
ஒரே வழி திமுக ஆட்சியை அகற்றுவது தான்
முதலமைச்சரிடம் நான் நேரிலும், பல்லாயிரம் முறை அறிக்கை வாயிலாகவும் வலியுறுத்திய போதிலும் கஞ்சா கட்டுப்படுத்தப்படவே இல்லை.
இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு இளைஞர்களையும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்கான ஒரே வழி திமுக ஆட்சியை அகற்றுவது தான். மக்களைக் காப்பதற்காக அந்த மகத்தான பணியை தமிழ்நாட்டு மக்கள் வரும் தேர்தலில் செய்து முடிப்பார்கள்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.