Anbumani Ramadoss on CM MK Stalin Foreign Visit 
தமிழ்நாடு

முதல்வரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி : புள்ளி விவரத்தோடு அன்புமணி

Anbumani Ramadoss on CM MK Stalin Foreign Visit : முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் படுதோல்வியில் முடிந்து இருப்பதாக அன்புமணி விமர்சித்து இருக்கிறார்.

Kannan

முதல்வரின் வெளிநாட்டு பயணம் :

Anbumani Ramadoss on CM MK Stalin Foreign Visit : இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மேற்கொண்ட பயணங்களின் போது, ரூ.15,516 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டிருப்பதாகவும், 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். முதலீடுகளின் அளவு மிகக் குறைவு என்பதோடு, அவற்றில் பெரும்பாலானவை ஜோடிக்கப்பட்டவை.

பெரும்பாலானவை விரிவாக்க திட்டங்கள் தான் :

இங்கிலாந்தில் கையெழுத்திடப்பட்ட ரூ.8496 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் அனைத்துமே விரிவாக்கத் திட்டங்களுக்கானவை. இந்துஜா குழுமம் ரூ.7500 கோடி முதலீடு செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த குழுமம் தான் சென்னையில் அசோக் லேலண்ட் வாகன ஆலையை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் பேட்டரி சேமிப்பு அமைப்பு உள்ளிட்ட மின்சார வாகனங்களின் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக இந்த முதலீட்டை செய்யப் போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதமே இந்த நிறுவனம் வெளியிட்டு விட்டது. அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.1200 கோடி முதலீடு செய்வதாக அறிவித்த இந்த நிறுவனம் அந்த முதலீட்டையே இன்றுவரை செய்யவில்லை.

பெரிய அளவில் முதலீடு என்பது நாடகம் :

மொத்தத்தில் வெளிநாட்டு பயணத்தில் கையெழுத்திடப்பட்ட ரூ.15516 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்களில் 89%, அதாவது ரூ.13,815 கோடிக்கான முதலீடுகள் விரிவாக்கத் திட்டங்களுக்கானவை. இவற்றை தமிழ்நாட்டில் இருந்தே ஈர்த்திருக்க முடியும். இதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டு இங்கிலாந்துக்கும், ஜெர்மனிக்கு முதலமைச்சர் சென்றிருக்கத் தேவையில்லை. உண்மை சுட்டதால், விரிவாக்கத் திட்டங்களுக்கான முதலீடுகளை ஈர்க்கவும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியது கட்டாயம் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், அவ்வாறு செல்லத் தேவையில்லை.

மேலும் படிக்க : ”உங்களுடன் ஸ்டாலின் முகாம்” அடித்து விரட்டவா? : அன்புமணி ஆவேசம்

தொழில் முதலீடு - திராவிட மாடல் அரசு தோல்வி :

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட மாடல் அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பதுதான் உண்மை. அதை மறைப்பதற்காகத் தான் இத்தகைய நாடகங்களை திமுக அரசு நடத்தி வருகிறது. இந்த நாடகங்களை தமிழ்நாட்டு மக்கள் நம்பி ஏமாற மாட்டார்கள். உரிய நேரத்தில் உரிய பாடத்தை புகட்டுவார்கள்” இவ்வாறு அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார்.

===