Anbumani action against mla arul https://x.com/draramadoss
தமிழ்நாடு

ராமதாஸ்-அன்புமணி மோதல் உச்சம் : பாமக எம்எல்ஏ அதிரடியாக நீக்கம்

Salem PMK MLA Arul Dismissed : ராமதாஸ் பக்கம் நின்று தன்னை கடுமையாக விமர்சித்த எம்எல்ஏ அருளை கட்சியில் இருந்தே நீக்குவதாக, அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

Kannan

ராமதாஸ் - அன்புமணி மோதல் :

Salem PMK MLA Arul Dismissed : பாமகவில் தந்தை - மகன் மோதல் உச்சத்தில் உள்ளது. இருவரும் தங்களுக்கே அதிகாரம் என்று ஆணித்தரமாக பேசி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக நிர்வாகிகள் நீக்கம், புதியவர்கள் நியமனம் நடந்து வருகிறது.

பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி எந்தப் பக்கமும் சாராமல் ஒதுங்கி இருக்கிறார். சேலம் மேற்கு தொகுதி சட்டசபை உறுப்பினராக உள்ள பாமகவை சேர்ந்த அருள், ராமதாஸ் பக்கம் நிற்கிறார். அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கி இருக்கிறார் ராமதாஸ்.

அன்புமணி குறித்து அருள் விமர்சனம் :

அன்புமணி குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்த அருள், ராமதாசுக்கே கட்சியில் முழு அதிகாரம் என்றும், அவரை பகைத்து செயல்படக் கூடாது என்றும் கடுமையாக தெரிவித்து இருந்தார். தந்தையின் பேச்சை கேட்டு நடப்பதே மகனின் கடமை என்று மறைமுகமாக அன்புமணிக்கு அறிவுரை கூறி இருந்தார்.

இந்தநிலையில், பாமக தலைவர் என்ற முறையில் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிக்கையில், “சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் இரா.அருள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

எம்எல்ஏ அருள் மீது காட்டம் :

அண்மைக் காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது குறித்து விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இரா.அருளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் மதிக்கவில்லை.

பாமகவில் இருந்து அருள் நீக்கம் :

அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புச் சட்ட விதி 30ன் படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இரா. அருள் நீக்கப்படுகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.