தமிழக தேர்தல் களம்
DMDK Alliance 2026 : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்து வருகிறது. இம்மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரம் வாக்குப்பதிவு இருக்கும். வரும் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
தலைமை தேர்தல் ஆணையர் குழு, சென்னை வந்து தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறது. எனவே, விருப்ப மனு பெறுதல், அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு என பிசியாகி விட்டன.
திரிசங்கு நிலையில் தேமுதிக
தேமுதிக இதுவரை யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கவில்லை. அதிமுக கூட்டணிக்கு செல்லுமா? திமுக கூட்டணிக்குச செல்லுமா? என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
பிரேமலதா கேட்கும் இரட்டை இலக்க தொகுதிகளை கொடுக்க இரண்டு கட்சிகளும் தயாராக இல்லை. தவெக பக்கம் செல்லலாம் என்றாலும், சரியான பதில் இல்லை எனத் தெரிகிறது.
தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி
தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி களத்தில் நிற்கின்றன.
தேமுதிக சார்பில் விருப்ப மனு
இந்தநிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தேமுதிக சார்பில் 2026 தேர்தலுக்கான விருப்ப மனு இன்று தலைமை அலுவலகத்தில் தொடங்கி உள்ளது. இதை மகிழ்ச்சியாக சொல்லுகிறேன்.
கேப்டனிடம் வைத்து ஆசிர்வாதம் பெற்று தொடங்கி உள்ளது. 12ம் தேதி வரை விருப்ப மனு வாங்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.
தேர்தலில் வெற்றி நிச்சயம்
கேப்டனின் ஆசிர்வாதத்தோடு தெய்வத்தின் ஆசிர்வாதத்தோடும் இந்த தேர்தல் வெற்றியாக அமையும். உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம்.
கட்சியினர் கூறும் கட்சியுடன் கூட்டணி
எங்கள் மாவட்ட செயலாளர் நிர்வாகிகள் யாருடன் இந்த முறை கூட்டணி வைக்க வேண்டும் என சொல்கிறார்களோ அந்த கூட்டணியில்தான் வைப்போம். தேமுதிகவின் எதிர்காலத்திற்கு எது நல்லதோ அந்தக் கூட்டணி முடிவு செய்வோம்.
தேமுதிக உள்ள கூட்டணியே ஆட்சி அமைக்கும்
மேலும் தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு கூட்டணி அறிவித்து விடுவோம். தேமுதிகவினர் எதிர்பார்க்கும் நல்ல கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும்” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
==================