Rice Price Hike In Tamil Nadu Delta Cultivation Affected Ponni Seeraga Samba Price
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநில மக்களின் அன்றாட உணவில் அரிசி பிரதான இடம் வகித்து வரும் நிலையில், தற்போது தமிழ்நாட்டில் அனைத்து ரக அரிசிகளின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டின் ஆண்டு அரிசி நுகர்வு சுமார் 85 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ள நிலையில், அதில் 35 சதவீதம் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்தே பெறப்படுகிறது.
எனினும், போதிய மழைப்பொழிவு இல்லாதது மற்றும் மேட்டூர் அணை நீர் திறக்கப்படாதது போன்ற காரணங்களால் அரிசி விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
அரிசி விலை உயர்வுக்கான முக்கியக் காரணங்கள்
போதிய மழையின்மை
மழைப் பொழிவு குறைந்ததால் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து வரும் பொன்னி அரிசி வகைகளின் வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை திறக்கப்படாதது
மேலும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை போதிய தண்ணீர் இல்லாததால் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக தமிழ்நாட்டின் நெல் சாகுபடியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நெல் தட்டுப்பாடு
தொடர்ந்து தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் விலையை உயர்த்தியதால், அரிசி ஆலைகளுக்கு நேரடியாகக் கிடைக்கும் நெல்லுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஆலை உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அரிசி விலை பட்டியல் சந்தை நிலவரம்
கர்நாடகா / ஆந்திரா பொன்னி ஆகிய ரகங்கள் கடந்த 15 நாட்களில் இருமுறை விலை உயர்ந்து, தற்போது ஒரு கிலோ ரூ. 80 வரை விற்பனையாகிறது.
அதேபோல் சன்ன ரக அரிசி அதாவது கிச்சிலி சம்பா, தூய மல்லி ஆகிய ரகங்கள் கிலோவுக்கு ரூ.8 வரை உயர்ந்து, ரூ.52 ல் இருந்து ரூ.60 ஆக அதிகரித்துள்ளது.
சீரக சம்பா கிலோவிற்கு ரூ.110-க்கு விற்கப்பட்ட நிலை மாறி, தற்போது ரூ.200 வரை உயர்ந்துள்ளது.
மைசூர் பொன்னி அரிசி ரூ.50-ல் இருந்து ரூ.65 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டு பொன்னி அரிசி ரூ.55-ல் இருந்து ரூ.68 ஆக உயர்ந்துள்ளது.
இட்லி அரிசி ரூ.46-ல் இருந்து ரூ.48 ஆக உயர்ந்துள்ளது.
மோட்டா ரக அரிசி (CR 1009, பொன்மணி) கிலோவுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.38-க்கு விற்கப்படுகிறது.
திடீர் நெல் தட்டுப்பாட்டால் ரூ.1,200-க்கு விற்பனையான ஒரு சிப்பம் அரிசி தற்போது ரூ.1,450 வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை
சந்தையில் சட்டவிரோத அரிசி பதுக்கல் ஏதேனும் நடக்கிறதா என்பதைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
=====