அனல் பறக்கும் தேர்தல் களம்
Prime Minister Narendra Modi, who is visiting Tamil Nadu today on a two-day visit, will offer prayers at Thiruparankundram and address an NDA meeting in Madurai : தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வந்து, தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை நடத்தி முடித்து விட்டார். மார்ச் முதல் வாரத்தில் கூட தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
பிரதமர் மோடி தமிழகம் வருகை
திமுக, அதிமுகவும் கூட்டணியை இறுதி செய்து விட்டு, மக்களை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாஜகவும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு இருக்கிறது.
இதன் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடி இரண்டுந நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.
சென்னையில் தங்குகிறார் மோடி
டெல்லியில் இருந்து சென்னை வரும் அவர், இன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். அப்போது தமிழக பாஜக தலைவர்களை அழைத்து அவர் ஆலோசனை நடத்தவும் வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரி பயணம்
நாளை காலை புதுச்சேரி செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
புதுச்சேரி சேதராப்பட்டில் 50 ஏக்கரில் ரூ.1,100 கோடியில் ஜிப்மர் மருத்துவமனையின் மேம்பட்ட விபத்து சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் கட்டும் அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “புதுச்சேரியில் ரூ.2,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை செல்லும் பிரதமர்
பின்னர் ஹெலிகாப்டரில் பிற்பகல் 2.45 மணியளவில் தஞ்சாவூர் செல்கிறார். அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு 3.30 மணியளவில் மதுரை வருகிறார்.
விமான நிலைய வளாகத்தில் வான் கட்டுப்பாட்டு கோபுரத்தை திறந்து வைக்கும் பிரதமர், புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்கள், பரமக்குடி - ராமநாதபுரம் நான்கு வழிச் சாலை திட்டங்களை காணொலி வாயிலாகத் திறந்து வைக்கிறார்.
திருப்பரங்குன்றத்தில் தரிசனம்
மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம், நீதிமன்றம் தொடங்கி, தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பிரதமரின் திருப்பரங்குன்றம் வருகை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
என்டிஏ கூட்டத்தில் உரையாற்றுகிறார்
இதைத்தொடர்ந்து, மண்டேலா நகரில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
7,000 போலீசார் பாதுகாப்பு
பொதுக்கூட்டம் முடிந்த பிறகு மதுரை விமானம் நிலையம் சென்று, அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி மதுரையில் 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
=====================